துபாயில் வேலைபார்க்கும் இந்தியருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! ரூ.8 கோடி பரிசு
துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் ரூ.8 கோடி லொட்டரியை வென்றுள்ளார்.
துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) மில்லினியம் மில்லியனர் லொட்டரியில், 37 வயதான இந்தியர் ஒருவர் ஒரு மில்லியன் டொலர் (ரூ. 8,16,87,850) பெரும் பரிசை வென்றார்.
லொட்டரியில் வெற்றி பெற்ற அலெக்ஸ் வர்கீஸ், அக்டோபர் 28 அன்று அதிர்ஷ்ட டிக்கெட் எண் 2543-ஐ வாங்கி மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 405-ல் வெற்றிபெற்றார்.
"எனது பெயரில் இதுவே முதல் முறை"
அலெக்ஸ் வர்கீஸ், கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் வசித்துவருகிறார். அவர் துபாயில் உள்ள ஆல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் 9 சக ஊழியர்களுடன் சேர்ந்து இந்த டிக்கெட் வாங்கினார். எனவே அந்தத் தொகையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
DDF
வெற்றிபெற்றது குறித்து அலெக்ஸ் வர்கீஸ் கூறியதாவது: "எனது பெயரில் நாங்கள் டிக்கெட் வாங்குவது இதுவே முதல் முறை, நாங்கள் இறுதியாக வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
1999-ஆம் ஆண்டு மில்லினியம் மில்லியனர் ஷோ தொடங்கப்பட்டதில் இருந்து ஒரு மில்லியன் டொலர் பரிசை வென்ற 198-வது இந்தியர் வர்கீஸ் ஆவார்.
மிலேனியம் மில்லியனர் துபாய் டூட்டி-ஃப்ரீ டிக்கெட்டுகளை வாங்குபவர்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
மற்ற இந்திய வெற்றியாளர்கள்
துபாயில் வசிக்கும் இந்தியரான 41 வயதான ஜஸ்டின் ஜோஸ், அக்டோபர் 22 அன்று ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் எண் 0058-உடன் சீரிஸ் 1820-ல் BMW X6 M50i காரை வென்றார்.
துபாயில் வசிக்கும் இந்தியரான ஷிபின் கே ஜோஸ், சீரிஸ் 518-ல் டிக்கெட் எண் 0570-உடன் BMW F 900 XR மோட்டார் பைக்கை வென்றார்.
அதே நேரத்தில் ஷார்ஜாவில் வசிக்கும் ஒரு இந்தியரான பிள்ளை வெங்கடா, சீரிஸ் 519-ல் டிக்கெட் எண் 0119 உடன் BMW R 9T Scrambler மோட்டார் பைக்கை வென்றார்.