மிரட்டல், துப்பாக்கிச்சூடு அச்சுறுத்தல்- கனடாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள இந்திய வம்சாவளி குடும்பம்
கனடாவின் Peel Region பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பம், தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு அச்சுறுத்தல்களால் அங்கு வாழ்வது பாதுகாப்பானதல்ல எனக் கருதி நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளது.
தர்ம்ஜித் என்ற இந்திய வம்சாவளி நபர், 2025 அக்டோபர் மாதம் முதல் அடையாளம் தெரியாத கும்பலிடமிருந்து பணம் கேட்டு மிரட்டல் அழைப்புகளைப் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
அவர் பொலிஸில் புகார் அளித்தபோதும், அழைப்புகள் தொடர்ந்து வந்துள்ளன.
2025 நவம்பர் 25 அன்று அவரது பண்ணை வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பொலிசார், அந்த வீட்டில் தங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.
ஆனால், அவர்கள் மீண்டும் அங்கு திரும்பியபோது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்தது.

தர்ம்ஜித் கூறியதாவது: “பொலிசால் எங்களை பாதுகாக்க முடியவில்லை. எப்போதும் புதிய எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற ஆலோசனை மட்டுமே கிடைத்தது. அதனால், இங்கு புதிய வீடு வாங்குவதற்குப் பதிலாக, நாட்டை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்தோம்.” என்று கூறியுள்ளார்.
கனடாவில் இந்திய வம்சாவளி குடும்பங்களை குறிவைத்து நடைபெறும் கட்டாய வசூல் (Extortion) சம்பவங்களின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
கனடா அரசு, Lawrence Bishnoi கும்பலை ‘தீவிரவாத அமைப்பு’ என பட்டியலிட்டுள்ளது. இந்த கும்பல், இலக்குகளைத் தேர்வு செய்து, பணம் கேட்டு, மறுத்தால் வீடுகள் அல்லது சொத்துகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதன் வீடியோவை அனுப்பி மீண்டும் மிரட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், Peel Regional Police அதிகாரிகள், இந்தச் சம்பவத்தில் Bishnoi கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |