ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு
இந்தியாவில், உடை வாங்கக் கூட வசதியில்லாமல், ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்துவந்த நபர் ஒருவரை, இன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உரையாற்ற வருமாறு அழைத்துள்ளது.
ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்...
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்த ரவீந்திர மாணிக்ராவ் மெட்கர் (Ravindra Manikrao Metkar, 57), இளமையில் உடை வாங்கக்கூட வசதியில்லாத நிலையில் வாழ்ந்துவந்துள்ளார்.
ஆனால், 1984ஆம் ஆண்டு, தன் தந்தையிடம் 3,000 ரூபாய் வாங்கி, தங்கள் வீட்டு மாடியில் சிறியதாக கோழிப்பண்னை ஒன்றைத் துவங்கியுள்ளார் மெட்கர்.
பிறகு வங்கியில் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி, 4,000 கோழிகள் வாங்கியுள்ளார். 2006ஆம் ஆண்டு, அவரது கோழிப்பண்ணையில் கோழிகள் எண்ணிக்கை 20,000ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், உலகம் முழுவதும் தாக்கிய பறவைக்காய்ச்சல், மெட்கருக்கும் சரியான அடியாக அமைந்துள்ளது.
என்றாலும் மனம் தளராத மெட்கர், மீண்டும் 2008ஆம் ஆண்டு, 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி 20,000 கோழிகள் வாங்கியுள்ளார்.
இன்று, தனக்குக் கடன் எதுவும் இல்லை என்று கூறும் மெட்கர், இப்போது தன் பண்ணையில் 8 லட்சம் கோழிகள் இருப்பதாகவும், ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வருவாய் பார்ப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அழைப்பு
இந்நிலையில், பிரித்தானியாவில் நடைபெறும், உலகளாவிய ஆராய்ச்சி மாநாட்டில் உரையாற்ற வருமாறு மெட்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், உலக பொருளாதார மன்றமும் இணைந்து அந்த மாநாட்டை நடத்துகின்றன.
மே மாதம் 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெற உள்ள அந்த மாநாட்டின் கருப்பொருள், ’ஒவ்வொரு மனதிற்குமான செயற்கை நுண்ணறிவு’ என்பதாகும்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மெட்கருக்கு அனுப்பியுள்ள அழைப்புக் கடிதத்தில், ’ஒரு இந்திய வேளாண் தொழில்முனைவோர் என்னும் முறையில், உங்கள் அனுபவத்தையும் பங்களிப்புகளையும் கருத்தில் கொண்டு, மாநாட்டின் போது நடைபெறும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டுப் பரிமாற்றங்களுக்கும் உங்கள் வருகையும் ஆலோசனைகளும் மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்கர் ஏற்கனவே, சிங்கப்பூர் பல்கலை முதலான பல இடங்களில் உரையாற்றியுள்ளார்.
ஒரு காலத்தில், சரியான உடை இல்லாமல், கிழிந்த உடைகளை தைத்துப் போட்டுக்கொண்டு, சைக்கிள் கூட இல்லாமல் கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்குச் செல்வேன், அங்கு உரையாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்கிறார் மெட்கர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |