ஆண்டு பிறந்து 39 நாட்களில் இது ஐந்தாவது சம்பவம்... வெளிநாட்டில் இந்திய வம்சாவளி மாணவருக்கு ஏற்பட்ட துயரம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆண்டு பிறந்து 39 நாட்களில் இது ஐந்தாவது சம்பவம் என கூறப்படுகிறது.
பூங்கா ஒன்றில் மாணவரின் சடலம்
அமெரிக்காவின் Indiana மாகாணத்தில் அமைந்துள்ள Purdue பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் மாணவரான 23 வயது Sameer Kamath சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் மாணவரின் சடலம் பூங்கா ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Sameer Kamath கடந்த ஆகஸ்ட் 2023ல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் அமெரிக்க குடியுரிமையும் பெற்றிருந்தார்.
மட்டுமின்றி, தனது முனைவர் பட்டப்படிப்பை 2025ல் முடிக்கவும் திட்டமிட்டிருந்தார். அவரது உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும், மிக விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Purdue பல்கலைக்கழகத்தில் தான் ஒரு நாள் முன்னர், Neel Acharya என்ற இந்திய மாணவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். அவரது தாயார் தமது மகனைக் காணவில்லை என புகார் அளித்திருந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுத்தியலால் 50 முறை
கடந்த வாரம் ஓஹியோவில் 19 வயதேயான ஷ்ரேயாஸ் ரெட்டி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் இனவெறுப்பு அல்லது மர்மம் இருப்பதாக கருதவில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16, திகதி வீடற்ற நபர் ஒருவரால் Vivek Saini என்ற இந்திய மாணவர் சுத்தியலால் 50 முறை கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இலவசமாக உணவு தர மறுத்த காரணத்தால், அந்த நபர் Vivek Saini-ஐ கொடூரமாக கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது 300,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அதிகரித்துவரும் கொலை மற்றும் இறப்புகள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |