இந்தியாவுக்கு எதிராக திரும்பிய குட்டி தீவு நாடு... புதிய ஜனாதிபதி அதிரடி
மாலத்தீவுகள் முழு சுதந்திரமாக இருக்க விரும்புவதாகவும், தீவு தேசத்தில் நிலைகொண்டுள்ள இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார்.
தடையின்றி அதிகாரம்
தேர்தல் பிரச்சாரத்திலும், தற்போதைய ஜனாதிபதி இப்ராகிம் சோலி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த முய்ஸு, தீவு நாட்டின் விவகாரங்களில் இந்தியா தடையின்றி அதிகாரம் செலுத்த அனுமதிப்பதாக முய்ஸு குற்றம் சாட்டியிருந்தார்.
மட்டுமின்றி, இந்திய துருப்புக்களை அங்கு நிலைநிறுத்த அனுமதிப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மையை அவர்களிடம் சரணடைய செய்துள்ளதாகவும் சாடினார்.
இந்தியா மட்டுமின்றி, எந்த நாட்டின் துருப்புகளும் தங்கள் நாட்டில் நிலைகொண்டிருந்தால், எனது முடிவு இதுவாகவே இருக்கும் என்றும் முய்ஸு விளக்கமளித்துள்ளார்.
சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் டெல்லியின் ஆதரவுடன் ராடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர்.
இந்திய போர்க்கப்பல்கள்
மட்டுமின்றி, இந்திய போர்க்கப்பல்கள் மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து பணிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, இந்திய அரசாங்கத்தின் இராணுவ பிரசன்னத்தை அகற்றுவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக முய்ஸு தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த பேச்சுவார்த்தைகளும் வெற்றி கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய ராணுவத்தை விலக்கிவிட்டு வேறு நாடுகளுக்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |