வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் பதவியேற்றால் கொண்டாடும் இந்தியர்கள்: பதிலுக்கு முதுகில் குத்தும் அரசியல்வாதிகள்...
பிரித்தானியாவில் அதிக காலம் தங்கியிருப்பவர்களில் பெரும்பான்மையோர் இந்திய புலம்பெயர்ந்தோர்தான் என்று கூறியிருக்கிறார் சுவெல்லா.
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதில் பிரித்தானிய பிரதமர் ஆர்வம் காட்டும் நிலையில், உள்துறைச் செயலரோ சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுவரை முக்கிய பொறுப்பேற்ற எந்த இந்திய வம்சாவளியினராவது தாங்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால் இந்தியாவுக்கு எதையாவது சாதகமாக செய்திருக்கிறார்களா என்றால் அதற்கு பாசிட்டிவ் பதில் கிடைப்பது அபூர்வமே.
இந்தியர்கள்தான் அவர்களை இந்திய வம்சாவளியினர் என பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் செய்யும் செயலைப் பார்த்தால் முதுகில் குத்துவதைப் போல உள்ளது.
புலம்பெயர்ந்துதான் பிரித்தானியாவுக்கு வந்தார்கள் இந்திய வம்சாவளியினரான பிரீத்தி பட்டேலின் பெற்றோர். ஆனால், அவர் பதவிக்கு வந்ததும், முழுமூச்சுடன் புலம்பெயர்வோருக்கு எதிராகத்தான் வேலை செய்தார்.
சரி, அவர் பதவி விலகிவிட்டார். அவரது இடத்தில் பிரித்தானியாவின் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ளவரும் இந்திய வம்சாவளியினர் என்றதும், இந்திய வம்சாவளியினரான ரிஷிதான் ஜெயிக்கவில்லை, குறைந்தபட்சம் இன்னொரு இந்திய வம்சாவளியினருக்காவது முக்கிய பொறுப்பு கிடைத்ததே என மகிழ்ச்சி அடைந்தார்கள் ஒரு கூட்டம் இந்தியர்கள்.
ஆனால் இந்திய வம்சாவளியினரான சுவெல்லாவும், வந்ததுமே வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார்.
ஆம், பிரித்தானியாவைப் பாருங்கள், இந்த நாட்டில் விசா காலம் முடிந்த பிறகும் அதிக காலம் தங்கியிருப்பவர்களில் பெரும்பான்மையோர் இந்திய புலம்பெயர்ந்தோர்தான் என்று கூறியிருக்கிறார் சுவெல்லா.
விடயம் என்னவென்றால், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவைக் கைவிட்டு விட்டது.
இப்போது பிரித்தானியா இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள விரும்புகிறது. இந்த தீபாவளிக்குள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றிவிட ஆர்வமாக இருக்கிறார் புதிய பிரித்தானியப் பிரதமரான லிஸ் ட்ரஸ். ஆனால், அவருடைய அமைச்சரவையிலேயே உள்துறை அமைச்சராக இருக்கும் சுவெல்லாவோ, முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எந்த நாடுமே தனக்கு இலாபம் இல்லாமல் மற்றொரு நாட்டுடன் ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளாது.
ஆக, இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா விரும்பும் பட்சத்தில், பதிலுக்கு, எந்த ஒப்பந்தம் செய்தாலும் அதில் ஒரு முக்கிய விடயமாக தன் மாணவர்களும் தொழில் வல்லுநர்களும் பிரித்தானியாவுக்கு சென்று வருவது எளிதாக்கப்படவேண்டும் என்பதுதான் இந்தியா தரப்பு எதிர்பார்ப்பு.
ஆனால், முதலுக்கே மோசம் என்பதுபோல, இந்தியாவுடன் தடையில்லா வர்த்தகம் மட்டும் வேண்டும், ஆனால், அவர்களுக்கு விசா கொடுக்கவேண்டுமானால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் என்பது போல சுவெல்லா பேசுவாரானால், எந்த அளவுக்கு அந்த ஒப்பந்தம் சாத்தியம் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், தங்கள் தரப்பு நியாயமாகத்தான் இருக்கவேண்டும் என்பதற்காக, சுவெல்லாவின் கருத்தைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்தியர்களுக்கு விசா கொடுக்கவேண்டுமானால் கொஞ்சம் யோசிக்கவேண்டும் என்று சுவெல்லா பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான எந்த விடயங்களும், இருதரப்புக்கும் இலாபம் அளிப்பதாக இருக்கும் வகையிலானதாக இருக்கவேண்டும் என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.