ரோபோக்களுக்கு பயிற்சி - தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் இந்திய பெண்கள்
இந்திய பெண்கள் தலையில் கேமரா பொருத்திக்கொண்டு, ரோபோக்களுக்கு பயிற்சியளிக்க தரவு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ரோபோட்களின் வளர்ச்சி
செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழியர்களின் வேலை இழப்புக்கு வழிவகுத்துள்ளது.
இதே போல், மனித வடிவிலான ரோபோக்களின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் வேலை இழப்பிற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

2050 ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் ரோபோட்கள் தொழில்துறை மற்றும் வணிக பயன்பாட்டில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏஐ சேட்பாட் போன்ற செயலிகளை, இணையத்தில் உள்ள தரவுகள் மற்றும் மனிதர்களுடனான உரையாடல் ஆகியவற்றின் மூலம் தரவுகள் மூலமாக பயிற்சி வழங்கி அதனை அந்த நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன.
ஆனால், மனித வடிலான ரோபோட்களுக்கு பயிற்சி வழங்க மனிதர்கள் நிஜ உலகில் எவ்வாறு இயங்குகிறார்கள் என்ற தரவு தேவைப்படுகிறது. தற்போது மனிதர்களை அதற்கான தரவுகளை வழங்கி, ஊதியத்தையும் பெற்று வருகின்றனர்.
தலையில் கேமரா பொருத்திக்கொண்டு சம்பாதிக்கும் பெண்கள்
சென்னையை சேர்ந்த 25 வயதான இல்லத்தரசியான நாகிரெட்டி ஸ்ரீராம்யச்சந்திரா, தான் வீட்டு வேலை செய்யும் போது தனது தலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை பொருத்திக்கொண்டு பணியாற்றுகிறார்.

அதன் மூலம் படம்பிடிக்கப்படும் வீடியோக்களை, சிறப்பு செயலி வழியாக அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தரவு நிறுவனத்திற்கு அனுப்புகிறார்.
இதற்காக அவர் ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் (2.6 அமெரிக்க டொலர்) ஊதியம் பெற்று வருகிறார்.

இது குறித்து பேசிய அவர், "வீட்டு வேலை மட்டும் செய்வதற்காக 1 மணி நேரத்திற்கு ரூ.250 வேறு யார் கொடுப்பார்கள்? எதிர்காலத்தில் நானும் ஒரு ரோபோ வாங்கக்கூடும்" என தெரிவித்துள்ளார்.
இதே போல் கரூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள், தாங்கள் பணி செய்வதை தலையில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு கேமராக்கள் மூலம், தரவுகளை அனுப்பி வருகின்றனர்.

மேலும், பெங்களூருவை சேர்ந்த 55 வயதான பூ விற்கும் பெண்மணி ஒருவர், தனது தலையில் ஸ்மார்ட்போனை பொருத்திக்கொண்டு, தான் பூமாலை கட்டுவதை வீடியோ மூலம் ஏஐ நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறார்.

செயற்கை நுண்ணறிவுத் தரவுகளை உருவாக்குதல், செயலாக்குதல் மற்றும் குறிப்பெடுத்தல் ஆகியவற்றுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |