மூடப்பட்ட 8 விமான நிலையங்கள்... இந்தோனேசியாவில் சிக்கித் தவிக்கும் 170,000 பயணிகள்
Indonesia Volcano eruption 170,000 travellers stranded: இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக 170,000 பயணிகள் சிக்கிக்கொண்டனர்.
அனக் கிரகடாவ் மலையில் ஏற்பட்ட எரிமலைச் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவின் இரண்டு விமான நிலையங்கள் உட்பட எட்டு இந்தோனேசிய விமான நிலையங்கள் திங்கள்கிழமை அதிகாலையில் மூடப்பட்டுள்ளது.
எப்போது முடிவுக்கு வரும்
ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகளுக்கு நடுவில் அமைந்துள்ள அனாக் கிரகடாவ் எரிமலை, வெள்ளிக்கிழமை இரவு வெடித்ததில் இருந்து, அதிலிருந்து பரவிய சாம்பல் ஜகார்த்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளை மூடியுள்ளது.

இதன் காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 170,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவின் பிரதான விமான நிலையத்தில் அமுலில் உள்ள தடை, உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என விமான நிலைய நிர்வாகம் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மாறிவரும் வானிலை காரணமாக இது எப்போது முடிவுக்கு வரும் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியாது என்று போக்குவரத்து அமைச்சர் தத்தி பூர்வா காந்தி தெரிவித்தார்.
அந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், ஜகார்த்தாவின் அருகிலுள்ள லாம்பங் மற்றும் மேற்கு ஜாவா மாகாணங்களுக்குச் சேவை வழங்கும் விமான நிலையங்கள் உட்பட மற்ற ஏழு விமான நிலையங்களும், குறைந்தபட்சம் காலை 8.59 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட எட்டு விமான நிலையங்களில் இதுவரை 1,558 விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், இதனால் 170,000 பயணிகள் சிக்கித் தவிப்பதாகவும் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் சோகர்னோ-ஹட்டா விமான நிலையத்திற்கு வந்து சென்றவை அல்லது அங்கிருந்து புறப்பட்டவை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜகார்த்தா முழுவதும் உள்ள பள்ளிகளும் பாதிக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் இணையவழியில் நடத்தப்படுவதாக அந்நகரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; எனினும், இந்த நடைமுறை எவ்வளவு காலத்திற்கு அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.
இன்னும் வெடிப்புகள்
சனிக்கிழமையன்று அனாக் கிரகடாவ் எரிமலை வெடித்ததில், சில நூறு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்கக்கூடிய வகையில் எரிமலைக்குழம்பு நீரூற்றும் பேரொலிகளும் எழுந்ததாக புவியியல் ஆய்வு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் பல எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்தன; எரிமலை கண்காணிப்பு அமைப்பின் இணையதளம், மிகச் சமீபத்திய வெடிப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணிக்கு நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வரும் நாட்களில் இன்னும் வெடிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகவே உள்ளது என அந்த முகமை திங்களன்று எச்சரித்தது. சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்வெளியில் எரிமலைச் சாம்பல் கண்டறியப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் விமானச் செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமாத்ராவின் தென்கோடி முனையில் உள்ள பண்டார் லம்பங் நகரையும் எரிமலைச் சாம்பல் அடைந்து, நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் சாலை ஓரங்களையும் மூடியது. எரிமலைச் செயல்பாடுகளால் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.

எரிமலையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவுள்ள தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் துறைமுக அதிகாரிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
1883-ஆம் ஆண்டில் கிரகடாவ் (Krakatau) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து உருவான கால்டெராவில் (caldera), கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலிலிருந்து வெளிப்பட்ட இந்த எரிமலை அவ்வப்போது செயல்பட்டு வருகிறது.
அந்தப் பேரிடர் வரலாற்றிலேயே மிகவும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மற்றும் அதிக அழிவை விளைவித்த பேரிடர்களில் ஒன்றாகும்; இதில் சுமார் 35,000 பேர் மரணமடைந்தனர்.
2018-ஆம் ஆண்டில் அனக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலையின் சில பகுதிகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சுனாமியில் 429 பேர் மரணமடைந்தனர்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |