துப்பாக்கியால் சுட்டு... மரண தண்டனையை எதிர்நோக்கும் இளம்பெண்: அவர் செய்த குற்றம்?
இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார் பிரேசில் நாட்டு இளம் பெண் ஒருவர்.
விமான நிலையத்தில் கைது
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தோனேசியாவின் பாலி விமான நிலையம் வழியாக கத்தார் செல்ல முயன்ற மானுவேலா விட்டோரியா என்ற 19 வயது இளம்பெண்ணின் பைகளில் இருந்து சுமார் 3 கிலோ போதை மருந்து கண்டெடுக்கப்பட்டது.
Image: Newsflash
இதனையடுத்து பாலி சர்வதேச விமான நிலையத்தில் மானுவேலா விட்டோரியா கைது செய்யப்பட்டார். அத்துடன் போதை மருந்து கடத்தல் வழக்கு அவர் மீது பதியப்பட்டு, கடந்த மூன்று மாதமாக அவர் விசாரணைக் கைதியாக உள்ளார்.
இந்த நிலையில், அரசு தரப்பு சட்டத்தரணிகள், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என கடந்த வாரம் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.
போதை மருந்துகளுக்கு எதிரான இந்தோனேசியாவின் கடுமையான சட்டங்களின் கீழ் அவருக்கு துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படாலம் அல்லது வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
நம்பிய நபர்களால் ஏமாற்றப்பட்டார்
அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவிக்கையில், போதை மருந்து கடத்தல் குழுவினருடன் மானுவேலா விட்டோரியா என்பவருக்கு தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர் தரப்பு சட்டத்தரணி தெரிவிக்கையில், நம்பிய நபர்களால் மானுவேலா விட்டோரியா ஏமாற்றப்பட்டார் என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
Image: Newsflash
பிரேசில் நாட்டில் உள்ளாடைகள் மற்றும் வாசனை திரவியங்களை விற்று பிழைப்பு நடத்தியவர் மானுவேலா விட்டோரியா எனவும், குழு ஒன்றால் அவர் வஞ்சிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கில் சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியை நாடும் பொருட்டு, பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட இருப்பதாக மானுவேலா விட்டோரியா குடும்பம் அறிவித்துள்ளது.