காணாமல் போன பெண்..முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு..வயிற்றை கிழித்து மீட்பு
இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2018ஆம் ஆண்டு 54 வயதான பெண்ணொருவரை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணின் உடல் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இந்தோனேசியா நாட்டின் ஜாம்பி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜஹ்ரா(52). ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் மறுநாள் மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் இருந்ததை ஜஹ்ராவின் உறவினர்கள் பார்த்துள்ளனர்.
சுமார் 16 அடி நீளம் கொண்ட அந்த பாம்பின் வயிறு மிகவும் வீங்கிய நிலையில் காணப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜஹ்ராவை பாம்பு விழுங்கியிருக்கலாம் என்று நினைத்த உறவினர்கள், மலைப்பாம்பை அடித்துக் கொன்று அதன் வயிற்றை கிழித்தனர்.
AFP
அப்போது ஜஹ்ரா பாம்பின் வயிற்றில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரது உடலை உறவினர்கள் மீட்டனர். மலைப்பாம்பு அப்பெண்ணின் உடலை சுற்றிக் கொன்று பின் முழுமையாக விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.