நடுக்கடலில் மாயமான கப்பல்! உள்ளிருந்த பயணிகள் குறித்து ஏற்பட்டுள்ள பெரும் அச்சம்
இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர்.
நீர்மூழ்கி கப்பல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
உடனடியாக, நீர்மூழ்கி கப்பலை தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் முயற்சித்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பாலி தீவில் உள்ள கடற்பரப்பில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக இந்தோனேசிய ராணுவ தளபதி ஹடின் டிஜஹ்ஜண்டொ தெரிவித்துள்ளார்.
1,395 டன் எடைகொண்ட மாயமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது.
மேலும், மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியுள்ளது.
கப்பல் மாயமாகி 24 மணிநேரத்திற்கும் மேலாகியுள்ளதால் உள்ளிருந்த பயணித்த 53 பேரின் நிலை குறித்து பலத்த கேள்வி எழுந்துள்ளது.