கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சர்வதேச விமான சேவையை தொடங்கும் சவுதி அரேபியா
சவுதி அரேபியா அதன் அனைத்து சர்வதேச போக்குவரத்தையும் கடந்த டிசம்பர் 20-ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக தடை செய்திருந்தது.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் சர்வதேச விமான சேவை, தரைவழி போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை திறப்பதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா மற்றும் உருமாறிய வைரஸ் பரவியுள்ள வேறு எந்த நாட்டிலிருந்தும் சவுதி அரேபியாவிற்குள் நுழைய விரும்பும் எந்தவொரு வெளிநாட்டு பயணிகளும், அவரவர் நாட்டிலேயே குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.
பிறகு தங்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்த, தனிமைப்படுத்தலின் கடைசி நாளில் PCR test எடுத்திருக்கவேண்டும் என கூறியுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் பரவலாக பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் மற்றும் பிற நாட்டுப் பயணிகள் மனிதாபிமான அடிப்படையில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகும், 14 நாட்களுக்கு கண்காணிப்பில் உள்ள அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், வந்து இறங்கியதிலிருந்து அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள் ஒரு PCR சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவதற்கு முன் (13-வது நாளில்) ஒரு PCR சோதனை என இரண்டு முறை பரிசோதிக்கப்படுவார்கள்.
சவுதியில் இதுவரை மொத்தம் 362,488 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 6,400 இறப்புகள் பதிவாகியுள்ளன.