கோர முகத்தை காட்டும் தாலிபான்கள்.. ஆப்கானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை! வெளியான அதிர்ச்சி காரணம்
ஆப்கானில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடை விதித்ததை தாலிபான்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் சட்டதிட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
எதற்கு ஆப்கான் மக்கள் பயந்தார்களோ அவை ஒன்று ஒன்றாக நடந்து வருகின்றது. முதலில் பெண் கல்வி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது, இசை, சினிமா போன்றவற்றைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு தாலிபான்கள் எப்போதுமே எதிரிகள் தான். ஐபிஎல் 2021 நடைபெற்று வரும் நிலையில் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் இஸ்லாம் எதிர்ப்பு கொள்கைகள் இருக்கலாம் என்பதால் தடை விதிப்பதாக தாலிபான்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் தலைவர் மற்றும் பத்திரிக்கையாளர் எம்.இப்ரஹிம் மோமந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
மூத்த தலிபான் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் பெண்கள் விளையாடத் தேவையில்லை என்று கூறியிருந்தார். இதனால், ஆஸ்திரேலியா ஆப்கனுடனான டெஸ்ட் தொடரை ரத்து செய்யும் சூழல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.