ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி!
கொல்கத்தாவை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி திரில் வெற்றிபெற்றது.
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் துடுப்பாட முடிவு செய்தது.
இதனையடுத்து, அந்த அணியின் தொடங்க வீரர்களாக விர்திமன் சஹா மற்றும் ஷுக்மன் கில் களமிறங்கினர். கில் 7 ஓட்டங்களிலும், சஹா 25 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்துவந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த பிற வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறி ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் ரசல் 1 ஓவர் வீசி 5 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன் களமிறங்கினர். பில்லிங்ஸ் 4 ஓட்டங்களிலும், நரைன் 5 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் 12 ஓட்டங்களிலும், நிதிஷ் ரானா 2 ஓட்டங்களிலும் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த ரிங்கு சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 48 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ஒட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.