அமெரிக்கா - இஸ்ரேலுடனான போர்... மூன்று நிபந்தனைகள் விதித்த ஈரான்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர மூன்று நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
அமைதியை நிலைநாட்ட
அதில், எந்தவொரு தீர்மானமும் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும், எதிர்கால தாக்குதல்களை எதிர்கொள்ளாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியுள்ளர்.

அத்துடன், போரின் போது ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்,
ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் இந்த விவகாரத்தில் விவாதித்ததாகவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரித்து, இழப்பீடுகளை வழங்கி, எதிர்காலத்தில் ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இதனிடையே, ஈரான் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் அபோல்பசல் ஷேகார்ச்சி தெரிவிக்கையில், ஈரானிய துறைமுக வசதிகளை அமெரிக்கா தாக்கினால், பாரசீக வளைகுடாவில் உள்ள எந்த துறைமுகமோ, பொருளாதார மையமோ அல்லது இடமோ ஈரானின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இல்லை என எச்சரித்திருந்தார்.

கவிழும் என்ற நிலை இல்லை
மட்டுமின்றி, ஈரானிய துறைமுகங்கள் தாக்குதலுக்கு உள்ளானால், ஆயுதப்படைகள் இதுவரை செய்ததை விட கடுமையான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, போரினால் ஈரான் அரசாங்கம் கவிழும் என்ற நிலை இல்லை என்பதையும் இஸ்ரேல் அதிகாரிகள் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிர குண்டுவீச்சு நடவடிக்கைகள் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் பல மூத்த இராணுவத் தளபதிகளைக் கொன்றது.
ஆனால் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு நடவடிக்கை பொதுமக்களையும் பலி வாங்கியதுடன், குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளையும் அடித்து நொறுக்கியது, பல ஈரானியர்களை கோபப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |