தெருக்களில் உறங்கிய ஈரான் வீரர் - FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை
ஆட்ட நாயகன் விருது பெற்ற அலிரெஸா பெயிரன்வந்த், முன்னதாக FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பெல்ஜியம் - ஈரான் டிரா
பிபா கால்பந்து உலகக்கிண்ணத்தின் இன்றைய போட்டியில் G பிரிவை சேர்ந்த பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் மோதியது.

இதில், இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் போட்டி டிரா ஆனது.
அலிரெஸா பெயிரன்வந்த்
இந்த போட்டியில், பெல்ஜியம் வீரர்களை 7 முறை கோல் அடிக்க முயன்றும் அதை தடுத்த ஈரானின் கோல்கீப்பர் அலிரெஸா பெயிரன்வந்த்(alireza beiranvand) ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அலிரெஸா பெயிரன்வந்த், முன்னதாக FIFA கால்பந்து வரலாற்றில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
2016 அக்டோபரில் தென் கொரியாவுக்கு எதிரான ஒரு போட்டியின்போது, பந்தை 200.14 அடி (61.002 மீட்டர்) தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல், கால்பந்து வரலாற்றிலேயே மிக நீண்ட டிராப் கிக் 255.95 அடி (78.014 மீட்டர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

மேற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள குர்திஷ் லாக் நாடோடிக் குடும்பத்தில் பிறந்த அலிரெஸா பெயிரன்வந்தின் குடும்பத்திற்கு கால்பந்து வாங்குவதும், கையுறை வாங்குவதும் பணத்தை வீணாக்குவதாக இருந்துள்ளது.
அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைச்செலவுக்குப் பணம் கடன் வாங்கி, வீட்டை விட்டு ஓடி, பேருந்து மூலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானை அடைந்தார்.
அங்கு அவருக்கு தங்க இடமோ, தெரிந்தவர்களோட கூட யாருமில்லை. பல மாதங்களாக உள்ளூர் கால்பந்து கிளப்புகளுக்கு வெளியே தெருக்களில் உறங்கியுள்ளார்.
கையில் இருந்த பணம் தீர்ந்த பின்னர், அடிப்படை உணவை வாங்குவதற்காக, தெருக்களைப் பெருக்குவது, கார் கழுவும் இடத்தில் டயர்களைத் தேய்த்துக் கழுவுவது, தையல் தொழிற்சாலையில் உற்பத்திப் பிரிவுகளில் வேலை செய்வது, இரவு நேர பீட்சா கடையில் மாவு பிசைவது போன்ற வேலைகளை செய்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |