சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த ஈரானும் சீனாவும்... அமெரிக்க டொலர் ஆதிக்கம் முடக்கம்
உலக பொருளாதாரத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு, சத்தமே இல்லாமல், மிகப்பெரிய சம்பவம் செய்துள்ளது ஈரானும் சீனாவும்.
அமெரிக்காவுக்கு எதிராக
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தின் முதன்மை வழித்தடமாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மையமாக வைத்து, அமெரிக்காவின் டொலர் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட இந்த இரண்டு நாடுகளும் துணிந்து விட்டதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

டொலரை தவிர்த்துவிட்டு, தங்களுக்குள்ளேயே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வதன் மூலம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை துவம்சம் செய்ய ஈரான் முடிவெடுத்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போரானது இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இதில் ஆறுதல் அடைய தொடங்கியுள்ளன.
ஆசியாவில் பெரிய நுகர்வோரான சீனா சத்தமே இல்லாமல், அமெரிக்காவுக்கு எதிராக காய்களை நகர்த்தி வருவதுடன், ஈரானும் இதில் பங்களித்துள்ளது.
ஈரான் மற்றும் சீனா டொலர் ஆதிக்கத்தை எதிர்த்து முன்னெடுக்கும் இந்த நகர்வுகள், இந்தியா போன்ற பெரிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு ஒரே நேரத்தில் நன்மைகளையும் சவால்களையும் தரக்கூடிய ஒரு இரட்டை முனை கத்தி போன்றது.
டொலர் ஆதிக்கம் குறைந்தால், இந்தியா ஈரானிடம் இருந்து நேரடியாக இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்க வழி பிறக்கும். இது டொலருக்கான தேவையை குறைத்து, இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும்.
அதோடு டொலரை தவிர்த்து வர்த்தகம் செய்யும் போது, ஈரான் இந்தியாவுக்கு கணிசமான தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்க வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு அஞ்சாமல், மாற்று நாணய முறையை பயன்படுத்தி தடையின்றி எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும்.
இதில் கவலையளிக்கும் விடயம் , இந்தியா டொலரை தவிர்த்து வர்த்தகம் செய்தால், அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இது இந்திய ஐடி உள்ளிட்ட ஏற்றுமதி துறைகளை பாதிக்கக்கூடும்.
ஆனால், சீனா இதெற்கெல்லாம் அஞ்சாமல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மறைமுக காரணம்
அமெரிக்காவின் டொலருக்கு மாற்றாக சீன யுவானை (Yuan) முன்னிறுத்த, ஈரானும், சீனாவும் இந்த நீரிணையை ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்கியுள்ளன.
ஈரானிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வமற்ற சுங்கச்சாவடி முறையின் கீழ், அந்த வழியாக செல்லும் வணிக கப்பல்களுக்கு சீன யுவானில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது சீனாவின் கரன்சி வலுவடைந்து, சீன பொருளாதாரத்துக்கு சாதகமாக மாறலாம். இதன் மூலம் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையையும் தாண்டி, வெற்றிகரமாக வலம் வர முடிகிறது.
இதுவே அமெரிக்காவின் போருக்கு மற்றொரு மறைமுக காரணம் என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவின் பெட்ரோடொலர் முறையின் முக்கியத்துவத்தை ஈரான் தெளிவாக புரிந்து கொண்டுள்ளது.

அதேசமயம் சீனாவின் நோக்கமும் டொலரை போல வளர்ந்து வரும் நாடுகளில் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும் என்பது தான். ஏற்கனவே ஈரானின் பெரும்பகுதி எண்ணெயை யுவான் அடிப்படையில்,தள்ளுபடி சலுகைகளுடன் சீனா வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஈரானுக்கும் அதற்கு பதிலாக சீனாவில் இருந்து முக்கிய அம்சங்களை இறக்குமதி செய்து கொள்கிறது. ஈரான் - அமெரிக்கா இடையே போர் சூழல் இருந்தாலும், எரிபொருள் விலை உயர்ந்தாலும், அதனால் சீனாவுக்கும் பிரச்சனையில்லை.
ஈரானுக்கும் நிதி ரீதியாக பிரச்சனை இல்லை. கடந்த இரு வாரங்களில் மட்டும் 1.2 கோடி முதல் 1.37 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதில் பெரும்பகுதி சீனாவுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |