கப்பல்களுக்கு வரி ஒரு பக்கம்... உலகம் மொத்தம் ஸ்தம்பிக்கும் ஒரு முடிவை எடுத்த ஈரான்
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க கப்பல்களுக்கு வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ள ஈரான், தற்போது உலகம் மொத்தம் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு ஒரு முடிவை எடுக்க உள்ளது.
உலகம் ஸ்தம்பிக்கும்
ஈரானின் இந்த முடிவால் இனி வங்கி பரிவர்த்தனைகள் தாமதமாகும், நிதிச் சந்தைகளில் மந்தநிலை ஏற்படும், பிராந்தியம் தழுவிய இணைய சேவை முடக்கம் ஏற்படும், மொத்தத்தில் ஈரானின் அந்த ஒற்றை முடிவால் உலகம் ஸ்தம்பிக்க இருப்பதாகவே தெரிய வருகிறது.

ஈரான் அரசுடன் தொடர்புடைய ஊடகங்களிடம் இருந்து கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணைக்கு அடியில் செல்லும் கடலடி கேபிள்களைப் பயன்படுத்துவதற்காக, கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து பெருந்தொகை கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவெடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுத்தால், வேகம் பாதிக்கப்படலாம் என்றும் அந்த ஊடகங்கள் எச்சரித்துள்ளன. இதனிடையே, ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தமது சமூக ஊடகத்தில் குறிப்பிடுகையில், இணைய கேபிள்களுக்கு நாங்கள் கட்டணம் விதிப்போம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஊடகங்கள், இந்தத் திட்டத்தின்படி முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானிய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும், கடலடி கேபிள் ஆபரேட்டர்கள் உரிமக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று கோரப்படும் எனத் தெரிவித்தன.
அத்துடன், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு உரிமைகளும் ஈரானிய நிறுவனங்களுக்கே பிரத்தியேகமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்கத் தடைகள் தற்போது அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுக்குப் பணம் செலுத்துவதைத் தடை செய்திருப்பதால், ஈரான் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.
கடலடி கேபிள்கள் உலகளாவிய டிஜிட்டல் இணைப்பின் அடித்தளமாக விளங்குவதோடு, உலகின் பெரும்பாலான இணையம் மற்றும் தரவுப் போக்குவரத்தையும் கொண்டு செல்கின்றன.

அவற்றுக்கு ஏற்படும் எந்தவொரு கடுமையான சேதமும், இணைய வேகம் குறைவதைத் தாண்டி, வங்கி அமைப்புகள், இராணுவத் தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, நிதி வர்த்தகம் மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் போன்ற மேலும் பல இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும்.
சட்டத்திற்கு இணக்கமானது
பல முக்கிய கண்டங்களுக்கு இடையேயான கடலடி கேபிள்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்கின்றன. ஈரான் தொடர்பான நீண்டகால பாதுகாப்பு கவலைகள் காரணமாக, சர்வதேச நிறுவனங்கள் வரலாற்று ரீதியாக பெரும்பாலான கேபிள்களை அந்த நீர்வழியின் ஓமன் பக்கத்தில் உள்ள குறுகிய பாதை வழியாகவே அமைத்து வந்துள்ளன.
இருப்பினும், ஃபால்கன் மற்றும் கல்ஃப் பிரிட்ஜ் இன்டர்நேஷனல் ஆகிய இரண்டு கேபிள்கள் ஈரானிய எல்லைக்குட்பட்ட கடல் எல்லை வழியாகச் செல்கின்றன.
எந்தவொரு இடையூறும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஈரானின் அண்டை நாடுகள் கடுமையான இணையத் துண்டிப்புகளைச் சந்திக்க நேரிடலாம். இந்தியாவின் இணையப் போக்குவரத்திலும் பெரும் பங்கு பாதிக்கப்படலாம்.

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையேயான நிதி வர்த்தகம் மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளும் கணிசமாகக் குறையக்கூடும். ஈரானின் இந்த முடிவு சட்டத்திற்கு உட்பட்டது என்றே நிபுணர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
1982-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் கடல் சட்ட மாநாட்டை மேற்கோள் காட்டி, ஈரான் கட்டணம் விதிக்க முடிவு செய்தால், அது சர்வதேச சட்டத்திற்கு இணக்கமானதாகவே இருக்கும் என்று ஈரானிய ஊடகங்களும் விளக்கமளித்துள்ளன.
மட்டுமின்றி, சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் கடலடி கேபிள்களுக்குப் போக்குவரத்து மற்றும் உரிமக் கட்டணங்களை வசூலிக்கும் எகிப்தையும் ஈரான் ஒரு உதாரணமாகக் காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |