ஈரான் இராணுவம் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை அளித்த அறிக்கை... கலக்கத்தில் இஸ்ரேல்
ஈரானின் ஏவுகணை பலம் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் கலக்கம்
ஈரானுக்கு எதிராக தாங்கள் திட்டமிட்ட இலக்குகளை இன்னும் அடையாத நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை ஈரானுடன் செய்துவிடுவாரோ என்று இஸ்ரேலியத் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

அமெரிக்க உளவுத்துறை ரகசியங்கள் குறித்து அறிந்த அதிகாரிகள் சிலர், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள தங்களின் 33 ஏவுகணைத் தளங்களில் 30-ஐ ஈரான் மீண்டும் கட்டமைத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் கசிந்துள்ள அமெரிக்க அரசாங்கக் குறிப்பு ஒன்றில், ஈரான் போருக்கு முந்தைய தனது ஏவுகணைக் கையிருப்பில் ஏறத்தாழ 70 சதவீதத்தையும், நகரும் ஏவுகணை செலுத்தும் கருவிகளின் கையிருப்பில் 75 சதவீதத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றே தெரிய வருகிறது.
ஆனால், ஈரானின் இராணுவத் திறன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப்பும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரான் தனது நிலத்தடி ஏவுகணைச் சேமிப்பு மற்றும் ஏவுதள வசதிகளில் சுமார் 90 சதவீதத்திற்கான அணுகலை மீண்டும் பெற்றுள்ளது.
இருப்பினும், ஜனாதிபதி ட்ரம்பும் அவரது நிர்வாகமும் ஈரானின் இராணுவம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் கடற்படை முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டுவிட்டதாகவும் தொடர்ந்து திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர்.

அதே வேளை, ஈரான் அணு ஆயுதம் உருவாக்கும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதன் மூலம், ட்ரம்ப் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவாரோ என்று இஸ்ரேலியத் தலைவர்கள் கவலை கொள்கின்றனர்.
அடிப்படையற்றவை
போர் தொடங்குவதற்குக் காரணமாக அமைந்த பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்பாகவே, ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுவிடுவாரோ என்று இஸ்ரேல் தரப்பில் கவலைப்படுகிறார்கள்.
இந்த நிலையில், ஈரான் இராணுவம் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் அடிப்படையற்றவை என்றே வெள்ளை மாளிகையும் பென்டகனும் தெரிவித்துள்ளன.

ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் போது, ஈரான் இராணுவ ரீதியாக நசுக்கப்பட்டது, அவர்களின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன, அவர்களின் உற்பத்தி வசதிகள் அகற்றப்பட்டன, அவர்களின் கடற்படை மூழ்கடிக்கப்பட்டது, மேலும் அவர்களின் ஆதரவுப் படைகள் பலவீனப்படுத்தப்பட்டன என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா வேல்ஸ் ஆவேசமாக விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவின் முற்றுகையால் அவர்களின் பொருளாதாரத்திற்கு ஒரு நாளைக்கு அரை பில்லியன் டொலர் இழப்பு ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |