அமெரிக்காவை பயமுறுத்த பாரிய திட்டத்தை கையில் எடுக்கும் ஈரான்! பழிவாங்கும் சபதத்திற்கு பின் அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பனாமா கால்வாயில் தனது போர்க்கப்பல்களை நிறுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரானின் திட்டம்
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் இருந்து சுமார் 2,500 மைல் தொலைவில் பனாமா கால்வாய் அமைந்துள்ளது. இது மெக்சிகோ வளைகுடாவையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலுடன் இணைப்பதால் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக இடமாக உள்ளது.
ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த ஈரான் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
அதாவது பனாமா கால்வாயின் முக்கியமான வர்த்தக பாதையில் போர்க்கப்பல்களை நிறுத்த ஈரான் முடிவெடுத்துள்ளது. இது அமெரிக்காவை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கும் மற்றும் அமெரிக்க எல்லைக்குள் ராணுவ இருப்பைக் கட்டமைக்கும் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஜனாதிபதியின் சபதம்
முன்னதாக, தெஹ்ரானில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அமெரிக்காவுக்கு எதிராக பழிவாங்குவதாக சபதம் செய்தார்.
அதேபோல் அட்மிரல் இரானி விழா ஒன்றில் பேசும்போது, 'பனாமா கால்வாய்க்கான கடற்படையின் திட்டங்கள் சர்வதேச கடல் பகுதியில் நமது கடல்சார் இருப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. நாங்கள் பனாமா கால்வாயில் இருக்க திட்டமிட்டுள்ளோம்.
இன்றுவரை உலகின் அனைத்து மூலோபாய ஜலசந்திகளிலும் ராணுவ கடற்படை உள்ளது. நாங்கள் இரண்டு ஜலசந்திகளில் மட்டும் இருக்கவில்லை, இந்த ஆண்டு இந்த ஜலசந்திகளில் ஒன்றில் நாங்கள் இருப்போம்' என தெரிவித்தார்.
ஈரானின் இந்த திட்டம் அமெரிக்காவுடனான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.