கமேனியின் இறுதிச் சடங்கு... ஆயிரக்கணக்கான கல்லறைகளைத் தயார் செய்யும் ஈரான்
உயர் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகளின் போது, ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடிய ஒரு பேரழிவு ஏற்படுவதற்கான கொடூரமான சாத்தியக்கூறுக்கு அதிகாரிகள் தயாராகி வருவதாகவே தகவல் கசிந்துள்ளது.
அவசரக்காலத் திட்டம்
ஜேர்மன் நாளேடான Die Welt வெளியிட்டுள்ள செய்தியில், பல நாட்கள் நடைபெறும் இறுதி ஊர்வலங்களில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,

1,500 முதல் 3,000 பேர் வரை இறக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு ஈரானிய அதிகாரிகள் அவசரக்காலத் திட்டங்களை வகுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறப்புகள் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களைக் கையாள்வதற்காக அதிகாரிகள் ஒரு பிரத்யேகப் பிரிவை உருவாக்கியுள்ளதாகவும், அதேவேளையில் தெஹ்ரானின் பெஹெஷ்ட்-இ-ஸஹ்ரா (Behesht-e Zahra) கல்லறைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாளேடு தெரிவிக்கிறது.
தெஹ்ரான் நகராட்சி ஊழியர் ஒருவர் அந்தச் செய்தித்தாள்களிடம், சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது உண்மையானவை என்று கூறியுள்ளார்.
கடுமையான வெப்பம், பெரும் கூட்டம் உள்ளிட்ட காரணங்களால் அடுத்து என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாது என்பதால் 3,000 கல்லறைகள் தயார் நிலையில் வைத்திருப்பது சிறந்த முடிவென்றே அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
கமேனியின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமையன்று தெஹ்ரானில் தொடங்கின; இவை புனித நகரமான கோம் வழியாகச் சென்று, பின்னர் ஈராக்கிய நகரங்களான நஜஃப் மற்றும் கர்பலாவைச் சென்றடையும்.
வியாழக்கிழமை மஷ்ஹத்தில் சடங்குகள் நிறைவடையும் என்றும், அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிச் சடங்கு, பல ஆண்டுகளில் ஈரான் மேற்கொண்ட மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றைச் செயல்படுத்தத் தூண்டியுள்ளது.

தெஹ்ரான் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடுகள், துக்க நிகழ்வுகளில் பங்கேற்போரை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள், கூட்டத்திற்கு உணவளிக்க தற்காலிக சமையலறைகள், மற்றும் பார்வையாளர்களுக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டமும் அதீத வெப்பநிலையும் இணைந்து சூழலை விரைவாக ஆபத்தானதாக மாற்றக்கூடும் என்ற அச்சத்தையே இந்தத் தயாரிப்புகளின் அளவு பிரதிபலிக்கிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
2020-ஆம் ஆண்டில், கெர்மான் நகரில் நடைபெற்ற IRGC தளபதி காசெம் சொலைமானியின் இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 56 பேர் மரணமடைந்தனர்; 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1989-இல் நடைபெற்ற ருஹொல்லா கொமேனியின் இறுதிச் சடங்கும் குழப்பத்தில் முடிந்தது; இதில் குறைந்தது எட்டு பேர் மரணமடைந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
கூட்டம் நெரிசலால் ஏற்படும் ஆபத்துகளுக்கு அப்பால், ஈரானிய அதிகாரிகள் சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் தயாராகி வருகின்றனர். இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாக, அந்நிகழ்வுகளின்போது ஈரானை இலக்கு வைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகவும் இஸ்லாமிய புரட்சிகரப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்தது.

லட்சக்கணக்கான பொதுமக்களும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்த நிலையில், ஈரானின் தலைவர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் கூடியுள்ளனர், மொத்தத்தில் அவர்கள் அனைவரையும் தூக்க அமெரிக்காவால் முடியும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |