நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா: பிரித்தானியாவை எதிர்கேள்வி கேட்கும் ஈரான்
நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா: பிரித்தானியாவை எதிர்கேள்வி கேட்கும் ஈரான்
உளவு பார்த்ததாகக் கூறி பிரித்தானியர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா என பிரித்தானியாவை கேள்வி கேட்கிறது ஈரான்.
ஹரியின் புத்தகம் உருவாக்கியுள்ள பிரச்சினை
பிரித்தானிய இளவரசர் ஹரி, தான் எழுதி வெளியிட்டுள்ள Spare என்னும் புத்தகத்தில், தான் இராணுவத்தில் இருக்கும்போது 25 தாலிபான்களைக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் கெட்டவர்கள், ஆகவே, நல்லவர்களைக் கொல்வதற்கு முன் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூறியுள்ளார் ஹரி. அவர்கள் செஸ் போர்டில் இருந்து அகற்றப்பட்ட செஸ் காய்கள் என்று கூறியுள்ள ஹரி, தான் அந்த 25 தாலிபான்களைக் கொன்றதற்காக திருப்திபட்டுக்கொள்ளவும் இல்லை, தர்மசங்கடமாக உணரவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
image - AP
நாங்கள் செய்தால் தவறு, இளவரசர் ஹரி செய்தால் சரியா
ஈரான் சமீபத்தில் Alireza Akbari என்னும் பிரித்தானிய ஈரானியர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. அவர் ஈரானில் அதிகாரியாக இருந்துகொண்டு, தனது பதவிகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆகவே, ஈரான் மனித உரிமைகளை மீறிவிட்டதாக பிரித்தானியா குற்றம் சாட்டியிருந்தது.
தற்போது, அதற்கு பதிலடி கொடுத்துள்ளது ஈரான் தரப்பு.
பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்த ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் 25 அப்பாவிகளைக் கொன்றுள்ளார். அவர்களை அவர் மனிதர்களாகக்கூட மதிக்கவில்லை, செஸ் காய்கள் என்று கூறியுள்ளார், அதற்காக அவர் வருத்தப்படக்கூட இல்லை என்று கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சகம், தங்கள் தரப்பு போர்க்குற்றங்களைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு பிரித்தானியா மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு எப்படி பிரசங்கம் செய்யமுடியும்? என வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.