மத்திய கிழக்கில் இது நடக்கும்... அமெரிக்கா கட்டாயம் வருந்தும்: ஈரான் விடுத்த மிரட்டல்
ஈரானைத் தொட முடிவு செய்ததை எண்ணி அமெரிக்கா வருந்தும் என சபதம் செய்துள்ள ஈரான், ஹார்முஸ் நீரிணை முற்றுகையை நீட்டிக்க இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
விலை உயர்வைவிட
பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், எண்ணெய் விலை கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு போர், எண்ணெய் துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய விநியோக இடையூறுக்கு வழிவகுக்கக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.
ஆனால், உலக பொருளாதாரத்தை சிதைக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வைவிட ஈரானின் தீயப் பேரரசை வீழ்த்துவதே மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மீதான போரால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் அதிகரித்து வருவதால், ட்ரம்ப் கடுமையான அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறார். மட்டுமின்றி, எப்போது போர் முடிவுக்கு வரும் என்பது தொடர்பிலும் நாளுக்கொரு கருத்தை அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஈரான் பாதுகாப்புத் தலைவர் அலி லரிஜானி தெரிவிக்கையில், போரைத் தொடங்குவது என்பது எளிது, ஆனால் சில சமூக ஊடகப் பதிவுகளால் போரை வென்றுவிட முடியாது. இந்தக் கொடிய தவறான கணிப்பிற்காக நீங்கள் வருந்தும் வரை, நாங்கள் ஓயமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தையே ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமெனியும் தமது முதல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பழி வாங்கும் நடவடிக்கை தொடரும் என குறிப்பிட்டுள்ள மொஜ்தபா, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானை மொத்தமாக ஒடுக்கும் வரையில் போர் நீடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
தீக்கிரையாக்குவோம்
மேலும், ஈரான் மீதான போர், ஈரானிய மக்களுக்கு இந்த ஆட்சியை வீழ்த்துவதற்கான சூழலை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானின் வெளிவிவகார துணை அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி தெரிவிக்கையில், ஈரான் இதுவரை தற்காப்புக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது என்றும், தன் மீது மீண்டும் ஒரு போர் திணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவே விரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீதான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது, ஈரானின் அண்டை நாடுகள் மட்டுமே.
இந்த நிலையில், தங்களின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தீக்கிரையாக்குவோம் என்று ஈரான் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் கடுமையாகக் குறைத்துள்ளதாலும்,
எண்ணெய் கப்பல்கள் வளைகுடாப் பகுதியில் முடங்கியுள்ளதாலும், அடிப்படை எண்ணெய் விலைகள் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி, பணவீக்கத்தைத் தூண்டும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |