ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை
Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணை அதிகாரிகள், 50 உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைகளை (polygraph tests) நடத்தியுள்ளனர்.
கசியவிட்டார்களா
ஈரான் போரின் காரணமாக அமெரிக்காவில் முக்கிய ஆயுதங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த தகவல்கள் உட்பட, ரகசியத் தரவுகள் பத்திரிகையாளர்களுக்குக் கசிந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் படைப் பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடம், அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இரகசியத் தகவல்களைக் கசியவிட்டார்களா என்று விசாரிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளின் நோக்கம், இரகசியத் தகவல்களை வெளியிட்ட நபர்களைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்திருக்கக்கூடிய மற்றவர்களை அச்சுறுத்துவதுமாகும்.
ஈரான் போரால் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் போன்றவற்றின் எண்ணிக்கைப் பெருமளவில் குறைந்துவிட்டதாக வெளியான தொடர்ச்சியான செய்திகளுக்குப் பிறகு இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள் பணியாளர்கள் அல்லது விசாரணை விவகாரங்கள் குறித்துத் துறை கருத்துத் தெரிவிக்காது என்றும், ஆனால் வகைப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புத் தகவல்கள் கசிவதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விசாரிக்கும் என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள நமது படைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகும் என்றார்.
மோசமடைந்து வரும் சூழல்
மே 5-ஆம் திகதி முதல், ஈரான் போர் குறித்த செய்தியாளர் சந்திப்பு எதையும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நடத்தவில்லை; அத்துடன் பென்டகனில் செய்தியாளர்களின் அணுகலையும் அவர் மட்டுப்படுத்தியுள்ளார்.
ஈரான் போரில் அமெரிக்கா பெரும் சாதனைப் படைத்து வருவதாக திரைப்பட பாணியில் நாளும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தவர் இந்த பீட் ஹெக்செத்.
USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் மோசமடைந்து வரும் சூழல் குறித்து 'ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ்' (Stars and Stripes) இதழ் வெளியிட்ட விமர்சன ரீதியான செய்திகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த மாதம் பென்டகன் அதன் தலைமை ஆசிரியர் எரிக் ஸ்லாவின், வெளியீட்டாளர் மேக்ஸ் லெடெரர் மற்றும் மத்திய கிழக்கு செய்தியாளர் லாரா கோர்டே ஆகியோரை உத்தியோகப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்தது.

வியாழக்கிழமை அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்படாத நபர்களையும் அமைப்புகளையும் தேசத்துரோக இழிபிறவிகள் என்று கடுமையாகச் சாடியதோடு, ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
அத்துடன், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் ட்ரம்ப் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஆயுத விற்பனைகள் தற்போது முன்னெடுக்கப்படாது என்றும், நேச நாடுகளுக்கு மட்டும் ஆயுத விற்பனைத் தொடரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |