இரவு 8 மணிக்குள்…டிரம்ப் விதித்த கெடு: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த எச்சரிக்கை
செவ்வாய்க்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால் ஈரானுக்கு முடிவு கட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா மோதல்
ஈரான் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையிலான போர் நடவடிக்கைகள் காரணமாக ஈரான் முக்கிய பொருளாதார கடல்வழி தளமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.
இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது.

அதே சமயம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மறைமுக அமைதி பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
செவ்வாய்க்கிழமை கடைசி நாள்
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை செவ்வாய்க்கிழமைக்குள்(இன்று இரவு 8 மணிக்குள்) திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் என அனைத்தும் தகர்க்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
மேலும் ஈரான் நரகமாக மாறிவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்து இருந்தார்.
டிரம்ப் விதித்த 10 நாள் கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், அமெரிக்கா தங்களுடைய சிவப்பு கோட்டை தாண்டி செயல்பட்டால் ஈரானின் தாக்குதல் பிராந்தியத்தை தாண்டியதாக இருக்கும் என்றும் இந்த தாக்குதல்கள் கடுமையானதாக இருக்கும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை(IRGC) செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது.

அத்துடன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகங்களை அதிக நாட்கள் முடக்குவோம் என்று எச்சரித்துள்ளது.
இதுவரை இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டி வந்ததாகவும், தற்போது அந்த நிதானமும், அனைத்துக் கட்டுப்பாடுகளும் முற்றிலுமாக நீக்கப்பட்டு விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |