நாய் பிடிக்க பயன்படுத்தும் கம்பியைக் கொண்டு இளம்பெண்ணைக் கைது செய்யும் பொலிசார்: கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி
ஈரானில், நாய்களைப் பிடிக்கப் பயன்படுத்தும் கண்ணியைக் கொண்டு இளம்பெண் ஒருவர் கைது செய்யப்படும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவரை தரதரவென தெருவில் இழுத்துவரும் பொலிசார், அவரை நாய் பிடிக்கும் கண்ணியைக் கொண்டு பிடித்து இழுப்பதையும், தலை முடியைப் பிடித்தும் காலைப் பிடித்தும் தூக்கி பொலிஸ் வேனுக்குள் வீசுவதையும் காணலாம்.
இத்தனைக்கும் காரணம், அவர் தலையில் அணியும் ஸ்கார்ப் அணியவில்லை என்பதுதானாம்.
ஈரானில், தலையில் ஸ்கார்ப் அணியாதவர்களை பாலியல் தொழில் செய்பவர்கள் என்றும், ஒழுக்கக்கேட்டை ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டி, இதுபோல் மிருகத்தனமாக கைது செய்வதாக ஈரான் பெண்கள் உரிமை பிரச்சாரகரான Masih Alinejad என்பவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், உள்ளூர் கடைக்காரர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அந்த பெண், பொலிசாரிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், அது உண்மையில்லை என்று கூறும் Masih Alinejad, ஈரானில் பெண்கள் சிலர் தாங்கள் தலையில் ஸ்கார்ப் அணிவதை எதிர்த்து வருவதாகவும், அப்படி ஸ்கார்ப் அணியாதவர்களைக் குறிவைத்து கைது செய்யும் பொலிசார், பிறகு அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளைக் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.