ரஷ்யாவை அடுத்து ஈரானுக்கு சலுகை... எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா தீவிரம்
ரஷ்யாவிற்கு 30 நாட்கள் சலுகை அளித்தது போன்று கப்பல்களில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
140 மில்லியன் பீப்பாய்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், அதிரடியாக உயரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸ்ஸன்ட் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்களில், கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு செய்துள்ளதாகவும், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானியர்கள் அனுப்பி வந்த சுமார் 10 முதல் இரண்டு வாரங்களுக்கான எண்ணெய் முழுவதும் சீனாவுக்குச் சென்றிருக்கும். ஆனால் தற்போது எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ஈரானின் பீப்பாய்களை ஈரானுக்கு எதிராகவேப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது.

விலக்கு அளிக்கப்படும்
சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளையும் தற்காலிகமாக அமெரிக்கா நீக்கியது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 130 மில்லியன் பீப்பாய்கள் சேர்க்கப்பட்டதாக பெஸ்ஸன்ட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தினால், ரஷ்ய எண்ணெய்க்குப் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற ஒரு விலக்கு அளிக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஏற்கனவே கப்பல்களில் நிரப்பப்பட்டு கடலில் தேங்கியுள்ள கச்சா எண்ணெயை, ஒரு குறுகிய காலக்கெடுவிற்குள் விற்பனை செய்ய அனுமதிப்பது. இந்த முடிவுக்கு ஈரான் ஒத்துழைக்குமா அல்லது, ரஷ்யா போன்று அதிக விலை கேட்குமா என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |