குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம்
அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பது வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல்
பாரசீக வளைகுடா பகுதியில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பெயரில் இயங்கி வந்த 4 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதி பெறாமல் கடக்க முயன்றதும். ஈரான் படைகளின் எச்சரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து முன்னேறியதும் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

IRGC படைகளின் எச்சரிக்கையை புறக்கணித்த ஒரு கப்பலை ஈரான் தாக்கி பிடித்த நிலையில், மீதமுள்ள 3 கப்பல்கள் பின்வாங்கின.
இதனை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் தாக்கி பிடிக்கப்பட்டதை அடுத்து ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் சிரிக் பகுதியில் அமைந்துள்ள தகவல் தொடர்பு மையங்களை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, குவைத்தில் உள்ள அலி அல் சலீம் விமான தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சென்ட்காம் மறுப்பு
அமெரிக்க இராணுவ மத்திய கட்டளை தளமான சென்ட்காம் ஈரானின் இந்த அறிவிப்பை மறுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி நோக்கி ஈரான் ட்ரோன்களை அனுப்பியதற்கு பதிலடி கொடுக்கவே அந்நாட்டின் கடலோர ரேடார் தளங்களை அழித்ததாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |