கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மீண்டும் ஒரு பொதுமுடக்கம்?: பிரித்தானிய அறிவியல் ஆலோசகர் அச்சம்
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மீண்டும் ஒரு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என அரசின் அறிவியல் ஆலோசகர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாகும் சுவாசப்பாதை வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அரசின் அறிவியல் ஆலோசனைக்குழுவின் உப குழுவான CO-CINஇன் உறுப்பினரான பேராசிரியர் Peter Openshaw, தற்போதைய கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் காணப்படுவதாகவும், இன்னொரு பொதுமுடக்க கிறிஸ்துமஸ் பண்டிகையை சந்திக்க நேரிடுமோ என தான் மிகவும் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, ஆறு வாரங்களில் முதல் முறையாக, நேற்று 1,000ஐத் தாண்டியது.
ஆனால் அறிவியல் ஆலோசனைக்குழுவான SAGE அறிவியலாளர்களோ, கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டாலும் பிரித்தானிய மருத்துவ அமைப்பு குளிர்காலத்தில் கொரோனாவால் பெரிதாக பாதிக்கப்படாது என்றே கூறிவருகிறார்கள்.
இந்நிலையில்தான், இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியரான Openshaw, உடனடியாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்றும், இல்லையானால், கிறிஸ்துமஸ் காலத்தில் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் சூழல் ஏற்படலாம் என தான் மிகவும் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது கட்டுப்பாடுகளை விதிக்கத் தாமதித்தால், பிறகு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டி வரலாம் என்று கூறும் பேராசிரியர் Openshaw, கொரோனா சூழல் கட்டுக்குள் வரவேண்டுமானால், உடனடி நடவடிக்கை கட்டாயம் அவசியம் என்கிறார்.