அச்சுறுத்தும் புதிய வைரஸ்! அனைத்து சர்வதேச எல்லைகளையும் மூடிய முதல் நாடு
உலகை அச்சுறுத்திவரும் புதிய Omicron வைரஸ் பரவலுக்கு பயந்து, இஸ்ரேல் அதன் அனைத்து சர்வதேச எல்லைகளையும் மூடியது.
தெற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஓமிக்ரானின் (Omicron) பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தயும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பல நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் பிற தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், புதிய கொரோனா அச்சறுத்தலுக்கு பயந்து தனது அனைத்து எல்லைகளையும் மூடியது இஸ்ரேல் அரசாங்கம்.
அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வதாக அறிவித்த முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.
Omicron மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி-கண்காணிப்பு தொழில்நுட்பத்தை (counter-terrorism phone-tracking technology) நாடு பயன்படுத்தும் என்று இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் ஏற்கனவே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்று இஸ்ரேல் உள்துறை அமைச்சர் அய்லெட் ஷேக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த Omicron வகை கொரோனா வைரசுக்கு எதிராக "தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும், இருப்பினும் எந்த அளவிற்கு என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை" என்றார்.
அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள உள்ள இந்த தற்காலிக தடை, அடுத்த 14 நாட்களுக்கு நீடிக்கும் என்று பிரதமர் நஃப்தாலி பென்னட் (Naftali Bennett) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் தற்போது, ஒருவர் புதிய Omicron வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாடு இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.