உயிர் பயம் இருந்தால்... எஞ்சிய காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்
ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஹமாஸ் படைகள் விவாதித்து வரும் நிலையில், போரில் உயிர் தப்பியுள்ள காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மிரட்டல்
காஸாவின் முதன்மை நகருக்கு மொத்த மக்களும் சென்றுவிட இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், காஸா சிட்டியில் இஸ்ரேல் இராணுவம் உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
அதேவேளை இராணுவம் நகரத்தை மொத்தமாக சுற்றி வளைத்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதி செய்துள்ளார். உயிர் பயம் இருந்தால் காஸா மக்கள் உடனடியாக வெளியேறி, ஹமாஸ் படைகளை தனிமைப்படுத்த வேண்டும் என காட்ஸ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, வெளியேறாமல் தங்கியிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள் எனவும், தீவிரவாத ஆதரவாளர்கள் எனவும் கருதப்படுவார்கள் என்றும் அமைச்சர் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, மத்திய காஸாவை மேற்கு கடற்கரையுடன் இணைக்கும் Netzarim corridor-ஐ இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், இஸ்ரேல் இராணுவத்தின் மிரட்டலுக்கு பயந்து எவரேனும் காஸா சிட்டியிலிருந்து தெற்கே வெளியேறுவார்கள் என்றால் இஸ்ரேலிய இராணுவ சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். அது, உயிர் பயத்தில் வெளியேறும் பாலஸ்தீன மக்களை கொத்தாக கைது செய்யும் இஸ்ரேலின் சதி திட்டம் என்றே சர்வதேச ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி மக்கள் பயணிக்க எஞ்சியுள்ள கடைசி பாதையை மூடுவதாக இராணுவம் அறிவித்துள்ள சில மணி நேரங்களில் Netzarim corridor-ஐ இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
60 வயது பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவிக்கையில், காஸா சிட்டியின் நிலைமை தெற்கு காஸா பகுதியின் நிலைமையிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால் நான் வெளியேறுவதாக இல்லை என்றார்.
மரணத்தை எதிர்பார்த்தே
இதே மன நிலையில், பெரும்பாலான காஸா மக்கள் இருப்பதால், அவர்களை தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தி, இஸ்ரேல் இராணுவம் படுகொலை செய்யலாம் என்ற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
காஸாவின் எல்லாப் பகுதிகளும் ஆபத்தானவை, குண்டுவெடிப்பு எல்லா இடங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது, இடப்பெயர்ச்சி என்பது திகிலூட்டுவதாக உள்ளது என்பதுடன் அவமானகரமானது என அந்த 60 வயது நபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரண்டாண்டு கால இஸ்ரேல் தாக்குதலில் இருந்து இதுவரை உயிர் தப்பியுள்ள அனைவரும் மரணத்தை எதிர்பார்த்தே காத்திருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ள கருத்துகள், இஸ்ரேல் இராணுவம் போர் குற்றங்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்றே ஹமாஸ் பதிலளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |