இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்! 12 ஆண்டுகால ஆட்சியை இழந்தார் பெஞ்சமின்-நேதன்யா
இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்ற நிலையில், பெஞ்சமின்-நேதன்யாகு தன்னுடைய 12 ஆண்டுகால ஆட்சியை இழந்துள்ளார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பெஞ்சமின்-நேதன்யா பொறுப்பேற்றார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கு அதிக பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 23-ஆம் திகதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை.
இதன் காரணமாக அங்கு ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் அங்கு இருந்த 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதாவது யேஷ் அதிட் (17 இடங்கள்), காஹோல் லாவன்- புளூ அண்ட் ஒயிட் (8 இடங்கள்), இஸ்ரேல் பெய்டெய்னு (7 இடங்கள்), தொழிலாளர் கட்சி (7 இடங்கள்), யமினா கட்சி (7 இடங்கள்), நியூ ஹோப் (6 இடங்கள்), மெரேட்ஜ் (6 இடங்கள்), அரபு இஸ்லாமிக் ராம் (4 இடங்கள்) என மொத்த 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால், அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்த பின்பு, சுழற்சி முறையில் பிரதமர் பதவி வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், இதில் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட்(49), பிரதமர் பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். இதன் மூலம் இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இவருடைய புதிய அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் உள்ளனர்.
இஸ்ரேலில் நப்தாலி-பென்னட் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.