படையெடுப்புக்கு ஆயத்தம்... மத்திய கிழக்கு நாடு தொடர்பில் இஸ்ரேலுக்கு கனடா எச்சரிக்கை
தெற்கு லெபனானை ஆக்கிரமிப்பதற்கான இஸ்ரேலின் திட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும், லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படக்கூடாது என்றும் கனடா எச்சரித்துள்ளது.
தரைவழி ஊடுருவல்
தனது வடக்கு அண்டை நாடு மீது ஒரு பெரிய தரைவழிப் படையெடுப்பை நடத்த இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டு வரும் நிலையிலேயே கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனானின் தெற்கு எல்லைக்குள் 30 கி.மீ (18.6 மைல்கள்) வரையிலான நிலப்பரப்பை ஆக்கிரமித்து, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,072 ஆக உயர்ந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டிலும் வாரக்கணக்கில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களால் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா போன்ற இஸ்ரேலின் தரைவழி ஊடுருவல் நெருங்கி வரும் நிலையில், மனிதாபிமான நெருக்கடி குறித்த எச்சரிக்கைகள் அனைத்து மட்டங்களிலும் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், லெபனான் அரசாங்கத்திற்கும் லெபனான் மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில், கனடாவின் உலக விவகாரங்கள் அமைச்சகம், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க செயல்பட வேண்டும் என்று புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
அனைத்துத் தரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்கவும், உள்கட்டமைப்பு, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அமைதிப் படையினர் மீதான தாக்குதல்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்வதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தெற்கு லெபனானை ஆக்கிரமிக்கும் தனது திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் கோரிக்கை வைத்துள்ளார்.
லெபனானிலும் பின்பற்றி வருவதாக
அத்துடன், இத்தகைய நடவடிக்கை பொதுமக்கள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இத்தகைய முடிவுகள் பெரும் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, நாட்டின் ஏற்கெனவே மோசமான நிலையை மேலும் மோசமாக்கும்.
இதுபோன்ற தரைவழி நடவடிக்கைகளில் இருந்து இஸ்ரேலிய அதிகாரிகள் விலகி இருக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என பாரோட் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள லிட்டானி நதி வரையிலான தெற்கு லெபனான் பகுதியைத் தனது இராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என்று இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவின் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இஸ்ரேலின் வடக்குப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை, இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் ஆற்றின் தெற்கே உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
மேலும், காஸாவில் உள்ள ரஃபா மற்றும் பெய்ட் ஹனூன் ஆகிய நகரங்களின் மாதிரியை இஸ்ரேலின் இராணுவம் லெபனானிலும் பின்பற்றி வருவதாக காட்ஸ் கூறினார்.
பாலஸ்தீனப் பகுதியின் மீதான போரின் போது ரஃபா மற்றும் பெய்ட் ஹனூன் நகரங்கள் முற்றிலுமாகத் தரைமட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |