எந்த நொடியிலும் ஈரானுடன் போருக்குத் தயார்... இஸ்ரேல் பிரதமர் மீண்டும் சூளுரை
அமெரிக்கா ஈரான் இடையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலும், தேவைப்பட்டால் ஈரானை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராக உள்ளது என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
தயாராக இருக்கிறோம்
தொலைக்காட்சி உரை ஒன்றில், நாங்கள் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் இன்னும் உள்ளன, அவற்றை நாங்கள் உடன்படிக்கையின் மூலமாகவோ அல்லது மீண்டும் போராடுவதன் மூலமாகவோ அடைவோம் என நெதன்யாகு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேவைப்படும் எந்த நேரத்திலும் மீண்டும் போருக்குத் திரும்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் விரல் எப்போதும் துப்பாக்கியின் விசையின் மீதே உள்ளது.
இது இந்தப் போர் நடவடிக்கையின் முடிவல்ல, மாறாக நமது அனைத்து நோக்கங்களையும் அடைவதற்கான பாதையில் ஒரு படியாகும் எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு உடன்பாடு எட்டப்பட்டதால், முன்னெப்போதையும் விடப் பலவீனமாகவும், பெரும் சேதத்துடனும் ஈரான் உள்ளது. மேலும், போரில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு முன்பே இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டதற்காகத் தன்னைக் கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார்.
இஸ்ரேலின் முழுமையான ஒருங்கிணைப்புடன் மட்டுமே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் நேற்று இரவு அமுலுக்கு வந்தது என தெரிவித்துள்ள நெதன்யாகு, இஸ்ரேலுக்கு தெரியாமல் எந்த ஒப்பந்தமும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றார்.
மட்டுமின்றி, ஈரான் மீதான போரால் ஏற்பட்ட சாதனைகளையும் நெதன்யாகு பட்டியலிட்டார். ஏற்கனவே அவர்கள் குவித்திருந்த ஏவுகணைகளை மட்டுமல்ல, அவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் அழித்தோம்.

இஸ்ரேல் உறுதி செய்யும்
ஈரான் தற்போது தனது கையிருப்பில் எஞ்சியிருப்பவற்றை ஏவி வருகிறது, மேலும் அந்தக் கையிருப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளோம்; அதன் முக்கிய உள்கட்டமைப்புகளையும் மையவிலக்கு வசதிகளையும் அழித்துள்ளோம்.

அத்துடன், ஈரானில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்படுவதை இஸ்ரேல் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். ஈரானின் அடக்குமுறை நிர்வாகத்திற்கு நாம் ஒரு கடுமையான அடியைக் கொடுத்துள்ளோம்.
அதன் ஆயிரக்கணக்கான செயல்பாட்டாளர்களை நாம் ஒழித்து, அவர்களை எங்கு வேண்டுமானாலும் நம்மால் சென்றடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளோம் என்றார்.

அத்துடன், அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது பல வலுவானத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதையும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும், ஈரானுடனான போர் நிறுத்தத்தில் லெபனானிய ஆயுதக் குழு இடம்பெறாது என்று தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |