ஈரானுடனான 12 நாள் போர் தாக்குதல்: இஸ்ரேலுக்கு $12 பில்லியன் டொலர் சேதம்!
ஈரானுடனான 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு $12 பில்லியன் டொலர் சேதமடைந்து இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர்
ஈரானுடனான அண்மைய 12 நாள் மோதலின் விளைவாக இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாகவும், அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதலைத் தொடங்கியது.
ஆரம்ப இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது, ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்டதாகவும், அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானும் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடுமையாக சேதமடைந்தன.
குறிப்பாக, இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியது அந்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சேதத்தின் மதிப்பு
முதற்கட்டமாக, இஸ்ரேலின் வரித்துறை இயக்குநர் ஷே அகரனோவிச், ஈரானியத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 3 பில்லியன் டொலர் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரானியத் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 3 பில்லியன் டொலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்த ஆரம்ப மதிப்பீடு பெரும்பாலும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மட்டுமே உள்ளடக்கியது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கில் கொண்டால், மொத்த சேத மதிப்பு கணிசமாக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலால் ஸ்மோட்ரிச், போரின் காரணமாக இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |