தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்களுக்கு ஏற்படும் புதிய சிக்கல்! ஆய்வில் தெரியவந்த பகீர் தகவல்
இஸ்ரேலில் Pfizer கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் வயதினர் குறிப்பாக இளைஞர்களிடையே (Myocarditis) எனப்படும் இதய தசைகளில் அழற்சி ஏற்படுவதை கண்டறிந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில், டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை 5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போட்டவர்களிடையே 275 Myocarditis நோய்கள் பதிவாகியுள்ளன.
இந்த விஷயத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் ஆய்வின் முடிவுகளை இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மூன்று குழு நிபுணர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.
ஆய்வின் படி, இதய அழற்சியால் பாதிக்கப்டப்ட பெரும்பாலான நோயாளிகள் மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு மேல் சிகிச்சை பெறவில்லை எனவும், அதற்குள் குணமடைந்து வீடு திரும்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 95% நோயாளிகளுக்கு லேசான பாதிப்பே இருந்தததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் (Pfizer) தடுப்பூசி பெறுவதற்கும், 16 முதல் 30 வயதுடைய ஆண்களிடையே Myocarditis தோன்றுவதற்கும் இடையே தொடர்பு உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தொடர்பு மற்ற வயதினரை விட 16 முதல் 19 வயதுடைய ஆண்களிடையே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து PFIZER நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், Myocarditis பாதிப்பு குறித்து இஸ்ரேலிய ஆய்வு பற்றி அறிந்திருப்பதாகவும், இந்த பாதிப்புக்கு PFIZER தடுப்பூசி தான் காரணம் என எதுவும் நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
பாதகமான நிகழ்வுகள் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன மற்றும் தரவுகளை மதிப்பாய்வு செய்ய PFIZER இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் தடுப்பூசி பாதுகாப்பு துறையுடன் தவறாமல் சந்தித்து வருகிறது என தெரிவித்துள்ளது.