ட்ரம்பின் நகர்வுகளை உளவு பார்த்த இஸ்ரேல்... அதிர்ச்சி தெரிவித்த அமெரிக்க உளவுத்துறை
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சிகள் குறித்து அமெரிக்க உளவுத்துறை கவலை எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளவு அமைப்புகள்
அமெரிக்கா, ஈரானுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதோடு, மத்திய கிழக்கில் இஸ்ரேலுடனான தனது நீண்டகால உத்திசார் மற்றும் இராணுவக் கூட்டாண்மையையும் பேணிவரும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் இந்த அறிக்கைகள் வந்துள்ளன.

காஸா விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து ஹமாஸ் தலைவர்களையும் பல காரணங்களால் இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில்,
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளும் நோக்கில், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் தங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதில் மூத்த அமெரிக்க அதிகாரிகள், Steve Witkoff, Elbridge A. Colby, Michael P DiMino IV உள்ளிட்டவர்களை இஸ்ரேல் உளவு அமைப்புகள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததாக வெளியாகியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக உளவுத் தகவல்களைச் சேகரித்து வருகின்றன என்பது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகவே தெரியும். ஆனால் தற்போது இஸ்ரேலின் இந்த முயற்சிகள் வரம்புகளை மீறிவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
மேலும், இஸ்ரேலின் இந்த நகர்வுகளை அமெரிக்க உளவுத்துறை அந்த அறிக்கையில் உயர் நிலை அச்சுறுத்தலில் இருந்து அபாயகரமான நிலைக்கு உயர்த்தியுள்ளது.
அமெரிக்க இராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளைக் கண்காணிக்க முயன்றதாகக் கூறப்படும் பல சம்பவங்கள் விசாரிக்கப்பட்டதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரின் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் மென்பொருள், அவர்களது கைபேசிகளில் நிறுவப்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்ததும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுடனான பதற்றம் அதிகரித்ததிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியது. மட்டுமின்றி, இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் (US Central Command) வாயிலாக நெருக்கமாகப் பணியாற்றுவதுடன், பல்வேறு செயல்பாட்டு மற்றும் உத்திசார் விவகாரங்கள் குறித்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளனர்.
கூடுதல் கட்டுப்பாடு
மேலும், இஸ்ரேலின் நகர்வுகள் போர்க்கள உளவு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அம்பலமாகியுள்ள இப்பிரச்சனை, இவ்விரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உளவுத்துறைப் பகிர்வு ஏற்பாடுகளைச் சிக்கலாக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலியத் தரப்பினருக்கு அணுகக்கூடிய தகவல்களின் வகைகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பென்டகன் பரிசீலிக்கக்கூடும் என்றும் சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானுடன் ஒரு பேச்சுவார்த்தை மூலம் சாதகமான தீர்வை எட்டும் முயற்சியை ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அதே வேளையில், ஈரானை ஒடுக்கி அந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு கடுமையான அணுகுமுறையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி வந்ததே அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, வெள்ளை மாளிகை அதிகாரிகளும் இஸ்ரேல் தரப்பும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |