9 கிராமங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை... சுற்றி வளைத்துத் தாக்கிய இஸ்ரேல்
தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு இஸ்ரேல் கட்டாய வெளியேற்ற உத்தரவுகளைப் பிறப்பித்த நிலையில், சுற்றி வளைத்துத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
நிராகரித்த மறுநாள்
குறித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து, இஸ்ரேல் தாக்குதலில் 6 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஆயுதக் குழு நிராகரித்த மறுநாள் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 2,500 இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்திருந்த அன்கூன் கிராமத்தில், ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள் எனக் கூறப்படுபவை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்து, அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறின.
பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்ற குடும்பங்களால், அருகிலுள்ள பெரிய நகரமான சிடோனுக்குச் செல்லும் சாலைகள் கார்களால் நிரம்பி வழிந்தன.
இஸ்ரேலிய இராணுவம், அன்கூன் உட்பட தெற்கு லெபனானின் பெரும் பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதேவேளையில், நபாத்தியே பகுதியில் இராணுவ ட்ரோன் தாக்குதல்கள் மூலம் கார்கள் தாக்கப்பட்டன, மேலும் கஃபார் தெப்னிட் நகரம் மீது வான்வழித் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
இப்பட்டணம், இஸ்ரேலியப் படைகள் இந்த வாரம் கைப்பற்றிய பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகிலும், நபதியா நகரத்திற்குச் செல்லும் வழியிலும் அமைந்துள்ளது.

தெற்கு லெபனானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, ஆனால் தற்போது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கும் நபதியா நகரத்தை நோக்கி இஸ்ரேல் தனது முன்னேற்றத்தைத் தொடர்வதால், அந்நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல நகரங்களில் உள்ள மக்களை கட்டாயமாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று இடைக்கால பியூஃபோர்ட் சிலுவைப்போர் கோட்டையைக் கைப்பற்றிய பின்னர், தெற்கு லெபனான் மீதான தங்கள் படையெடுப்பைத் தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார்.
சரணடைவதற்குச் சமமான
இதனிடையே, ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தெற்கு லெபனானில் உள்ள கோட்டைக்கு அருகே இஸ்ரேலியப் படைகளை இலக்கு வைத்து, அவர்கள் மீது ராக்கெட் மழையை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலிய அரசாங்கமும் லெபனானும் ஒப்புக்கொண்ட, அமெரிக்காவின் மத்தியஸ்தத்திலான போர்நிறுத்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்த மறுநாளே இந்த மோதல் ஏற்பட்டது.

தாக்குதல்களை நிறுத்துவதற்கும், அதே வேளையில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்த அனுமதிப்பதற்கும் வகை செய்த அந்த ஒப்பந்தத்தை, சரணடைவதற்குச் சமமான ஒன்று என்று ஹிஸ்புல்லா படைகள் விமர்சித்திருந்தது.
இஸ்ரேலுக்கும் லெபனான் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஹிஸ்புல்லா ஒரு தரப்பாக இல்லை. ஆனால், லெபனான் அல்ல ஹிஸ்புல்லாவே தங்கள் இலக்கு என படையெடுப்பை நடத்தி வரும் இஸ்ரேல் கூறி வருகிறது.
இஸ்ரேல் தற்போது 608 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான லெபனான் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |