60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு... உலகின் முதல் நாடாக இஸ்ரேல் அறிவிப்பு
டெல்டா மாறுபாடு கடும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
குறித்த தகவலை இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் அறிவித்துள்ளதுடன், 5 மாதங்களுக்கு முன்னர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தங்களுக்கான மூன்றாவது டோஸ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செப்டம்பர் மாதம் 61 வயதாகவிருக்கும் ஜனாதிபதி Isaac Herzog வெள்ளிக்கிழமை முதல் நபராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு தற்போது பல உலக நாடுகளை மொத்தமாக உலுக்கி வருகிறது.
ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும் டோக்கியோ நகரில் மட்டும் ஒரு நாளில் 3,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பினுள்ளே மாஸ்க் கட்டாயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா மாறுபாடுக்கு எதிராக, உடம்பில் பாதுகாப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே மூன்றாவது டோஸ் தொடர்பில் இஸ்ரேல் முடிவெடுத்து, உலகில் முதல் நாடாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாசது டோஸ் அளிக்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே 2,000 பேர்களுக்கு மூன்றாசது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பக்கவிளைவுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றே இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த நாடும் இதுவரை மூன்றாவது டோஸ் தடுப்பூசி தொடர்பில் முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி மூன்றாவது டோஸ் தடுப்பூசியால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிவடையுமா என்பது தொடர்பிலும் உறுதி இல்லை என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் இருந்தே, இஸ்ரேலில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
மேலும், கொரோனா பரவலை வெற்றிகரமாக கையாண்ட உலக நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.