காசாவில் உணவு விநியோக மையத்திற்கு அருகே இஸ்ரேல் தாக்குதல்: 36 பேர் பலி, 208 பேர் காயம்!
காசாவில் உணவு விநியோக மையத்திற்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உணவு விநியோக மையத்திற்கு அருகே இஸ்ரேல் தாக்குதல்
காசா நகரில், உணவு விநியோக மையம் ஒன்றின் அருகே செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 208 பேர் காயமடைந்தனர் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு கிடைத்த காணொளிக் காட்சிகளில், தொலைவில் நிகழும் வெடிப்புகளிலிருந்து மக்கள் அலறுவதும், சிதறி ஓடுவதும் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திலிருந்து இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் தூக்கிச் செல்லப்படுவதும், அடர்த்தியான புகை வானில் எழுவதும் காணப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் (IDF) அங்கீகரிக்கப்பட்ட புதிய அமைப்பு ஒன்றினால் நடத்தப்படும் விநியோக மையங்களுக்கு அருகில் இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டினால் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
காணொளியில் காணப்படும் ஒரு மனிதர், "நாங்கள் வாழ விரும்புகிறோம், நாங்கள் சாப்பிட விரும்புகிறோம். எங்களுக்கு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர். எங்கள் வீடுகளில் வாழ விரும்புகிறோம். மூன்று வருடப் போர், உடல்கள் சிதறின, இதெல்லாம், கொஞ்சம் மாவுக்காகவா?" என்று வேதனையுடன் கூறுகிறார்.
நிபுணர்கள் எச்சரிக்கை
இஸ்ரேலின் காசா முற்றுகையும், அதன் இராணுவ நடவடிக்கையும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தை பஞ்சத்தின் விளிம்பிற்கு தள்ளிவிட்டதாக மனிதாபிமான உதவிப் பணியாளர்களும், நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
புதிய இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு பெற்ற அமைப்பு நடத்தும் உதவி மையங்களுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சுமார் 160 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மையங்களை நடத்தும் காசா மனிதாபிமான அறக்கட்டளை, விநியோக மையங்களுக்கு உள்ளேயோ அல்லது சுற்றியோ எந்த வன்முறையும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |