தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் இணைந்து நடவடிக்கை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீன சமூகங்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் வன்முறையைத் தூண்டியதற்காக இரண்டு தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு எதிராக பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.
மூர்க்கத்தனமானது
இஸ்ரேலிய அமைச்சர்களான Itamar Ben-Gvir மற்றும் Bezalel Smotrich ஆகிய இருவரும் பிரித்தானியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவார்கள். மட்டுமின்றி, இவர்களுக்கு பிரித்தானியாவில் ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அவை முடக்கப்படும்.
வெளிவிவகார செயலர் David Lammy தெரிவிக்கையில், இஸ்ரேல் நிதியமைச்சர் ஸ்மோட்ரிச் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்-க்விர் ஆகியோர் தீவிர வன்முறையையும் பாலஸ்தீனிய மனித உரிமைகள் மீதான கடுமையான துஷ்பிரயோகங்களையும் தூண்டியுள்ளர் என்றார்.
ஆனால் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அரசாங்க உறுப்பினர்களும் இந்த வகையான நடவடிக்கைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது மூர்க்கத்தனமானது என குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலிய அமைச்சர்கள் மீதான இந்த நடவடிக்கையானது பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
ட்ரம்பின் கோரிக்கை
ஸ்மோட்ரிச் மற்றும் பென்-க்விர் ஆகிய இருவரும் காஸாவில் நடந்த போர் குறித்த அவர்களின் நிலைப்பாட்டிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
இரு அமைச்சர்களும் காஸாவிற்குள் உதவிகளை அனுமதிப்பதை கடுமையாக எதிர்க்கின்றனர், மேலும் அங்குள்ள பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதிக்கு வெளியே மீள்குடியேற்ற வேண்டும் என்றும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன சமூகங்கள் தீவிர இஸ்ரேலிய குடியேறிகளின் கடுமையான வன்முறைச் செயல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், இது எதிர்கால பாலஸ்தீன அரசையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிக்க அடுத்த வாரம் அமைச்சரவை கூடும் என்றார்.
1967 ல் நடந்த மத்திய கிழக்குப் போரைத் தொடர்ந்து மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்கிரமித்ததிலிருந்து சுமார் 700,000 யூதர்களைக் கொண்ட சுமார் 160 குடியிருப்பு பகுதிகளை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.
ஆனால் சர்வதேச சட்டத்தின் கீழ், சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் இஸ்ரேலின் இந்த குடியேற்றங்களை சட்டவிரோதமாகக் கருதுகின்றனர். இருப்பினும் அமெரிக்காவின் முழு ஆதரவைக் கொண்டுள்ள இஸ்ரேல் இது சட்டவிரோதம் என்பதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |