ரஃபா நகரின் பெரும்பகுதியை சுற்றிவளைத்த இஸ்ரேல் டாங்கிகள்: அடங்காத நெதன்யாகு
அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் ரஃபாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை பிரிக்கும் பிரதான சாலையை இஸ்ரேலிய டாங்கிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய டாங்கிகள்
இதனால் தெற்கு காஸா பகுதியில் நகரின் முழு கிழக்குப் பகுதியையும் இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. ரஃபா நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் கிட்டத்தட்ட தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை குடியிருப்பாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, நகரின் கிழக்கில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் பதுங்கியிருப்பதாக ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது. ரஃபாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டது,
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நகரத்திற்கு வெளியே தங்குமிடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காஸாவின் பல பகுதிகளில் இருந்து போர் நெருக்கடியால், ரஃபா நகரில் தஞ்சமடைந்துள்ள மில்லியன் எண்ணிக்கையை கடந்துள்ள மக்கள் தற்போது உயிர் பயத்தில் வெளியேறி வருகின்றனர்.
ரஃபா நகரை வெல்லாமல், ஹமாஸ் படைகளை ஒழிக்க முடியாது என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால் ஹமாஸ் தரப்பு, ரஃபா நகரை கடைசி வரையில் பாதுகாக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தொண்டு அமைப்புகள் தெரிவிக்கையில், இந்தப் போர் ஏற்கனவே இடம்பெயர்ந்த நூறாயிரக்கணக்கான பொதுமக்களை பாதிப்பிற்குள்ளாக்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
ரஃபா மீதான தாக்குதல் முடிவு
ரஃபா பாதுகாப்பாக இல்லை என குறிப்பிட்டுள்ள ஒருவர், இஸ்ரேல் சுற்றிவளைத்துள்ளது என்றார். இங்கிருந்து வெளியேற வேண்டும், ஆனால் தமது குடும்பத்திற்கு ஒரு கூடாரம் வாங்க 2,000 ஷெக்கல்களை தன்னால் செலவிட முடியவில்லை என்றார்.
மேலும், டாங்கி குண்டுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் கிழக்கை மட்டும் அல்லாமல் ராஃபா முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் குறிவைக்கிறது என்றார். இஸ்ரேலிய டாங்கிகள் ஏற்கனவே கிழக்கு ரஃபாவை தெற்கில் இருந்து மூடியுள்ளன,
காஸா மற்றும் எகிப்துக்கு இடையே உள்ள ஒரே ஒரு குறுக்குவழியையும் கைப்பற்றி மூடிவிட்டன. ரஃபா மீதான தாக்குதல் முடிவு பல தலைமுறைகளாக பேணி வந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்கா தடுத்துள்ளது. இந்த நிலையில் தான், இஸ்ரேலியர்களுக்கு விரல் நகங்கள் போதும் போரை வெல்ல என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொக்கரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |