தன் வீட்டுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருப்பதைக் கண்ட இஸ்ரேல் பெண்மணி செய்த சமயோகித செயல்: ஹீரோ என புகழ்ச்சி
தன் வீட்டுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரை சமயோகிதமாக சமாளித்த இஸ்ரேல் பெண்மணி ஒருவரை, ஹீரோ என இஸ்ரேல் புகழ்கிறது.
தன் வீட்டுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருப்பதைக் கண்ட பெண்மணி
அக்டோபர் மாதம் 7ஆம் திகதி அதிகாலை, சைரன்கள் ஒலித்ததால் பாதுகாப்பான இடம் ஒன்றிற்குச் சென்றிருந்த ரேச்சல் எட்ரி (Rachel Edri, 65) என்னும் பெண்மணி, சிறிது நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, தன் வீட்டுக்குள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், அவர்களை அன்புடன் உபசரித்துள்ளார் அவர்.
பயங்கரவாதிகளில் ஒருவன், உங்களைப் பார்த்தால், என் அம்மா நினைவு வருகிறது என்று கூறியுள்ளான். உடனே, நானும் உங்கள் அம்மா போலத்தான், நான் உங்களுக்கு உதவி செய்கிறேன், உங்களை அன்புடன் கவனித்துக்கொள்கிறேன், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ரேச்சல்.
உடனே, மற்றொரு பயங்கரவாதி, ரேச்சலின் முகத்தில், துப்பாக்கியின் பின் பக்கக் கட்டையால் இடித்திருக்கிறான். காயம் பட்டாலும், அதையும் தாங்கிக்கொண்டு, அவனையும் சமாதானப்படுத்தியிருக்கிறார் ரேச்சல்.
அவர்கள் அனைவருக்கும் தேநீர், பழங்கள், பிஸ்கட்கள் கொடுத்து ரேச்சல் உபசரிக்க, கொகோ கோலா வேண்டும் என கேட்டிருக்கிறார்கள் அவர்கள். அவர்களுக்கு அதையும் கொடுத்து, அவர்களுக்கு பாடல்களைப் பாட, அவர்களும் குஷியாகி பாடல்களைப் பாட, இப்படியே 17 மணி நேரம் கடந்து சென்றிருக்கிறது.
முடிவடைந்த விருந்து
இதற்கிடையில், ரேச்சலின் மகனான Eviatar, அவரும் ஒரு பொலிசார்தான், ராணுவத்தினரை அழைத்துவந்து, அவர்களுக்கு தன் வீட்டின் வரைபடத்தை விளக்க, அதன்படி திடீரென வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் ரேச்சலின் வீடு கடும் சேதமடைந்துள்ளதால், அவரது குடும்பம் ஒரு ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ என புகழ்ச்சி
சமயோகிதமாக செயல்பட்டு, தன் நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற தன் பங்கைச் செவ்வனே செய்த ரேச்சலை, இஸ்ரேல் மக்கள், ஹீரோ என புகழ்கிறார்கள்.
நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த நிலையில், அவர் சந்தித்த நபர்களில் ரேச்சலும் ஒருவர்.
தன்னை உற்சாகத்துடன் கட்டியணைத்துக்கொண்ட ரேச்சலுக்கு, தன் நாட்டைக் காப்பாற்ற செய்த செயலுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டார் ஜோ பைடன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |