பொது இடங்களில் மாஸ்க் வேண்டாம்: மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்த இன்னொரு நாடு
கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் இனி பொது இடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை. இந்த நடைமுறை ஜூன் மாதம் 28ம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இருப்பினும் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மாஸ்க் கட்டாயம் என இத்தாலிய சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. தற்போது அந்த பதிப்பிலிருந்து மீண்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 52%க்கும் அதிகமான மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் 26% மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசிகளைப் பெருமளவு செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, தென்கொரியா, உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகள் பொது வெளியில் மாஸ்க் அணிய வேண்டாம் என்று அறிவித்துள்ளன.
மட்டுமின்றி, மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்தைத் தீவிரமாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.