காலில் ரத்தம் சொட்ட சொட்ட... ஆக்ரோஷமாக பந்து வீசிய வீரர்: நெகிழும் ரசிகர்கள்
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் அர்ப்பணிப்பை கண்டு ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானிக்க, இந்திய அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மீண்டும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 4, ராபின்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த நிலையில், ஆண்டர்சனின் அர்ப்பணிப்பு தான் தற்போது இணையபக்கங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆண்டர்சன் பந்து வீசிய போது, அவரது கால் முட்டியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட அது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால், எப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. அவரது வலது கால் முட்டிப் பகுதியில் இருந்து இரத்தம் கசிவது புகைப்படங்களில் பதிவாகியுள்ளது.
ஆனால், அதற்குள் இந்த படங்கள் இணையத்தில் பகிரப்பட, ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், அவரும் அந்த இரத்த காயங்களுடன் தொடர்ந்து பந்து வீசியுள்ளார்.