இந்தியப் பெண்ணை ஏமாற்றிய ஜேம்ஸ் பாண்ட்... ஒரு சுவாரஸ்ய மோசடி
*பிரபல பிரித்தானிய கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் என்ற பெயரில் அறிமுகமான பிரித்தானியர் ஒருவரிடம் ஏமாந்துள்ளார் இந்தியப் பெண் ஒருவர்.
*5 இலட்ச ரூபாய் வரை ஏமாந்த பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது அந்தப் பெண்ணுக்கு.
சமூக ஊடகம் ஒன்றில் சந்தித்த மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், தன்னை ஒரு பிரித்தானிய தொழிலதிபர் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார் ஒருவர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக பழகத் துவங்கிய இருவரும் விரைவில் நண்பர்களாகியிருக்கிறார்கள். ஒரு நாள், உங்கள் பிறந்த நாள் எப்போது, உங்களுக்கு பரிசுகள் அனுப்ப விரும்புகிறேன் என்று ஜேம்ஸ் பாண்ட் கூற, தனது பிறந்தநாள் மற்றும் முகவரியை அவருடன் பகிர்ந்துகொண்டுள்ளார் அந்த இந்தியப் பெண். பின்னர், தான் அந்தப் பெண்ணின் இந்திய முகவரிக்கு சில தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகள் அனுப்பியிருப்பதாகக் கூறியிருக்கிறார் அவர்.
Photo : iStock
அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்ட நேஹா என்ற பெண், தான் ஒரு ரிசர்வ் வங்கி அதிகாரி என்றும், அவருக்கு பிரித்தானியாவிலிருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதைப் பெற்றுக்கொள்ள 25,500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் கூற, அந்த தொகையை செலுத்தியிருக்கிறார் அந்த மும்பை பெண்.
பின்னர் மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட நேஹா என்ற பெண், அந்த பார்சலில் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும், அதனால் அவர் 26,000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் கூற, அதையும் செலுத்தியிருக்கிறார் அவர்.
அதன் பின்பும், தீவிரவாத எதிர்ப்பு சான்றிதழ் பெறவேண்டும், வரிகள் செலுத்தவேண்டும் என்றும் கூறி கிட்டத்தட்ட 5.06 இலட்ச ரூபாய் வரை அந்த மும்பை பெண்ணிடம் பெற்றுக்கொண்டிருக்கிறார் நேஹா.
இதற்கிடையில் ஜேம்ஸ் பாண்டைத் தொடர்புகொண்ட அந்தப் பெண், இதுபோல அதிகாரிகள் பணம் கட்டச் சொல்கிறார்கள் என்று கூற, அவரும் அது சரியானதுதான், பணம் செலுத்தி பார்சலைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதற்குப் பின்னும் அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்துகொண்டவர்கள் பணம் கேட்டுக்கொண்டே இருக்க, அதற்குப் பிறகுதான், தான் ஏமாற்றப்பட்டுவருவது புரிந்துள்ளது அந்த மும்பை பெண்ணுக்கு.
அதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை அவர் பொலிசில் இது குறித்து புகாரளித்துள்ளார்.
பொலிசார் இந்த மோசடியின் பின்னணியில் நைஜீரிய கும்பல் ஒன்று இருக்கலாம் என கருதி, அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.