ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கு
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மறுதணிக்கை செய்ய உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் மற்றும் தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜர் ஆகினர்.
தணிக்கை வாரியம் வாதம்
தணிக்கை வாரியம் தரப்பில், "கடந்த 6 ஆம் திகதி இந்த வழக்கு தொடரும் போதே, இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை.

படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரினார்கள்.
சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்ற வாதத்தை முன்வைத்தது.
மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய கேள்விக்கு, அவர் படத்தைப் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது என தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என நீதிபதி கேட்ட கேள்விக்கு, படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்துள்ளது என தணிக்கை வாரியம் பதிலளித்தது.
மேலும், படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுபடுத்தாது.
சினிமோட்டோகிராபி சட்டப்படியும், விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் தணிக்கை வாரிய தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9 ஆம் திகதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது.
ஜனவரி 6 ஆம் திகதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை.
ஒருவர் வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், வாரியம் ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகுதான் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும்.
ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறுஆய்வு செய்யப்பட்டிருக்கும், இக்குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தயாரிப்பு நிறுவனம் வாதம்
இதனையடுத்து வாதத்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனம், "படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது" என தெரிவித்தது.
படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது ? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவரிடம் புகார் கிடைத்தது. சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்து யார் என்பதை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்க கூடாது என தணிக்கை வாரியம் பதிலளித்தது.
இதனையடுத்து, தணிக்கை தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
தணிக்கை வாரியம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான உத்தரவு எங்கே? உத்தரவு இல்லாமல் எப்படி வழக்கு தொடர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
ஜனநாயகன் படம் எப்போது வெளியாகும் என அமேசான் நிறுவனம் கேட்கிறது. அமேசான் நிறுவனம் எங்களிடம் நஷ்ட ஈடு கேட்டால் என்ன செய்வது? தணிக்கை வாரிய நடவடிக்கையால் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையற்ற மன உளைச்சல் மற்றும் திட்டமிட்ட படி படத்தை வெளியிடாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் திகதி குறிப்பிடாமல் நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.
ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல் தொடர்வதால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |