ஒரு வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ளவும்: ஜப்பான் மக்களுக்கு அறிவுறுத்தல்
ஜப்பானை நேற்று மாலை பெரிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று தாக்கிய விடயம், மக்களுடைய அன்றாட வாழ்வுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம்
நேற்று, அதாவது, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி 4.53 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.
முதலில், 7.4 என்றும், பிறகு 7.5 என்றும் கூறப்பட்ட நிலையில், தற்போது, ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, Kuji என்னுமிடத்திலுள்ள துறைமுகம் ஒன்றை சிறிய அளவிலான, அதாவது, 80 சென்றிமீற்றர் உயரமுடைய சுனாமி ஒன்று தாக்கியுள்ளது.
இந்நிலையில், மேலும் பெரிய அளவில், அதாவது, 10 அடி உயரம் வரையுள்ள சுனாமி அலைகள் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருந்தது.
ஆனால், நல்ல வேளையாக இதுவரை அப்படி எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
அத்துடன், நிலநடுக்கத்தின்போது, ஒரே ஒரு முதியவர் மட்டும் படிக்கட்டுகளில் இறங்கும்போது கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட்டுள்ளது. வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அத்தியாவசிய பொருட்களை சேமித்துவைத்துக்கொள்ள அறிவுறுத்தல்
ஜப்பானில் 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த பாரிய நிலநடுக்கம் ஒன்றும், அதைத் தொடர்ந்த சுனாமியும் நாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டன.
அந்த பயங்கர நிகழ்வுக்கு சரியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அரசும் மக்களும் பரபரப்பானதில் ஆச்சரியமில்லை. ஆகவே, 171,957 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டிருந்தது.
அத்துடன், தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்பதால், ஜப்பான் பிரதமரான Sanae Takaichi நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்துக்கு உடனடியாக வெளியேற்றப்பட தயாராக இருக்குமாறும், அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், நிலநடுக்கம் நிகழ்ந்த அதே நாளில் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Yvette Cooper ஜப்பானில் இருந்துள்ளார்.

அவரும், ஜப்பான் வெளியுறவு அமைச்சரான Toshimitsu Motegiயும், டோக்கியோவில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள் என்பதும், நிலநடுக்கத்தால் பிரித்தானிய வெளியுறவுச் செயலரின் பயணத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |