இளம் வாக்காளர்களை மொத்தமாக வசப்படுத்திய ஜப்பானின் முதல் பெண் பிரதமர்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள், சனே தகைச்சி நாட்டின் இளம் வாக்காளர்களை மொத்தமாக வசப்படுத்தி வருகிறார்.
புதுமைக்கு மாறிவிட்டோம்
பிரதமர் சனே தகைச்சி பயன்படுத்தும் கைப்பைகள் முதல் இளஞ்சிவப்பு நிற பேனாக்கள் வரை, எதிர்பாராத விதமாக இளையோரைக் கவர்ந்த பொருட்களாக மாறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கீழ்சபைத் தேர்தலில் அந்த ஆதரவு எவ்வளவு தூரம் அவருக்கு சாதகமாக மாறும் என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.
ஜப்பான் திடீரென்று ஒரேயடியாக மாறியுள்ளதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார் 21 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர். சனே தகைச்சிக்காக பரப்புரையில் ஈடுபட்டுவரும் இவர், நாங்கள் பாரம்பரியத்திலிருந்து புதுமைக்கு மாறிவிட்டோம் என்கிறார்.
சமீபத்திய சில கருத்துக் கணிப்புகளில், 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே தகைச்சிக்கு கிட்டத்தட்ட 90 சதவீத ஆதரவு உள்ளது. தகைச்சி பதவியேற்ற உடனேயே NHK செய்தி ஊடகம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், 18 முதல் 39 வயதுடையவர்களிடையே அவரது செல்வாக்கு 77 சதவீதமாக ஆக இருந்தது.
ஒப்பீட்டளவில், இவருக்கு முன்பு பிரதமராக இருந்த Shigeru Ishiba மற்றும் Fumio Kishida ஆகியோருக்கு முறையே 38 மற்றும் 51 சதவீத மக்கள் செல்வாக்கே இருந்துள்ளது.
அவர் தன்னை மார்க்கெட்டிங் செய்து கொள்வதில் ரொம்ப கெட்டிக்காரன்னு நான் நினைக்கிறேன் என்கிறார் 24 வயது தகைச்சி ஆதரவாளர். அவருக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது, அவருடைய கொள்கைகள் தெளிவாகவும் உள்ளது, ஜப்பானைப் பாதுகாக்க அவருக்கு வலுவான விருப்பம் இருக்கிறது என குறிப்பிடும் பெண்மணி ஒருவர், நான் அவருக்கு முழுமையாக ஆதரவாக இருக்கிறேன் என்றார்.
சமூக ஊடகங்களை அவர் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியது தகைச்சியின் பிரபலத்திற்கு பங்களித்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இளம் வாக்காளர்கள் எளிமையான, நேரடியான கருத்துக்களுக்கும், கொள்கைகளை முன்னோக்கி நகர்த்தக்கூடிய ஒரு தலைவருக்கும் அதிக எதிர்வினையாற்றுகிறார்கள் என்கிறார் ஒசாகா பொருளாதார பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் ஒருவர்.

உழைப்பே பிரதானம்
தகைச்சியை பின்பற்றி தற்போது பல அமைச்சர்களும் சமூக ஊடகங்களில் தங்களின் செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஜப்பானின் அரசியல் வர்க்கம் வழக்கத்திற்கு மாறாக வம்சாவளியை சார்ந்தது. ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 30 சதவீதம் பேர்கள் பரம்பரை அரசியல்வாதிகள், இது அமெரிக்கா மற்றும் ஜேர்மனியை விட மிக அதிகம்.
ஆனால் தகைச்சி அவர்களில் ஒருவர் அல்ல, அவர் உழைப்பே பிரதானம் என்ற கொள்கையை முன்னிலைப்படுத்துபவர். உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றே கூறி வருபவர்.

கொள்கைகள் குறித்து ஆய்வு செய்ய அவர் அழைத்த அதிகாலை 3 மணி கூட்டம் கடும் விமர்சனத்திற்கு இலக்கானது. பிப்ரவரி 8 ஆம் திதி நடைபெறும் வாக்கெடுப்பானது, குளிர் காலத்தில், தேர்வு நடைபெறும் நாட்களில் மற்றும் வசந்த கால விடுமுறை சமயத்தில் முன்னெடுக்கப்படுகிறது, இது வாக்கு எண்ணிக்கையை மேலும் குறைக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 2025 மேல் சபைத் தேர்தலில், 20 வயதுக்குட்பட்டவர்களிடையே வாக்குப்பதிவு 52 சதவீதமாக உயர்ந்தது, இது 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பதிவான வாக்குகளிலிருந்து சுமார் 14 சதவீதம் அதிகமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |