தனிமைப்படுத்தலை மீறினால்: எச்சரிக்கை விடுக்கும் முக்கிய ஆசிய நாடு
வெளி நாடுகளிலிருந்து ஜப்பான் வருபவர்கள் இரு வார தனிமைப்படுத்தலை மீறினால் அவர்களது பெயர்களை பொதுவெளியில் அறிவிக்கும் நடைமுறை அமுலாகியுள்ளது.
ஜப்பானில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜப்பான் நிர்வாகம் தவித்து வருகிறது.
இந்த நிலையில், வெளி நாடுகளிலிருந்து ஜப்பான் திரும்பும் பயணிகள் கட்டாயமாக இரு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு அமுலில் இருக்கிறது.
மேலும் அவர்கள் தங்களது மொபைலில் இருக்கும் இடம் கண்டறியும் செயலியை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி பலர் பொது இடங்களில் சுற்றித்திரிவதாக தொடர்ச்சியான புகார்கள் வந்ததை அடுத்து, ஜப்பான் அரசு புதிய உத்தியை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, வெளி நாடுகளிலிருந்து ஜப்பான் வருபவர்கள் இரு வார சுய தனிமைப்படுத்தலை மிறீனால் அவர்களது பெயர்களை பொதுவெளியில் அறிவிக்கும் நடைமுறை அமுலாகியுள்ளது.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து ஜப்பான் திரும்பிய 3 பேர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாமல் விதிமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இந்த 3 பேரின் பெயர்களை சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.